சென்னை: இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியும், பாஜக., ஆர்.எஸ்.எஸ்., மோடி இவர்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் ஓவியங்கள் வரைந்து கண்காட்சி வைத்ததுடன், மற்றவர் மதத்தை இழிவுபடுத்தி மனம் புண்படும் வகையில் நடந்து கொண்ட சென்னை லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கும் படி, பல்வேறு தரப்பினரும் புகார் அனுப்பினர்.
தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. மேலும், பலரும் ஆன்லைன் வழியே தங்களின் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களுக்குத் தெரியாமல் இவ்வாறு நடந்துவிட்டதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
லயோலா கல்லூரி நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் தெரிவித்த போது, தங்களை மீறி இந்தக் காட்சியை நடத்தியவர்கள் தன்னிசையாக நடந்து கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இருந்த போதும், லயோலா கல்லூரியின் மன்னிப்புக் கேட்டலை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை. மேலும் புகார்களை குவித்த வண்ணம் உள்ளனர்.
வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் செயல்பட்டு, இந்துக்களை இழிவுபடுத்தி, மத்திய மோடி அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கருதிக் கொண்டு, இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்! எனவே, லயோலா கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளே இப்போது முழுதாக முழங்கப்பட்டு வருகின்றன.