சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்ஸவத்தை சிங்கப்பூர் ‘பாய லேபர்’ சிவன் கோயில் ஆலய வளாகத்தில் நடத்தினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் திருக்கல்யாண வைபவத்தில் சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை நிகழ்ந்த விசேஷங்களுக்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்திருந்தனர்.
சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.
கண்ணுக்கு விருந்தாக நடந்தேறிய இந்த உத்ஸவத்தில் கலை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள், சிறார்களின் நாட்டியம், பெண்களின் கோலாட்டம் போன்றவை சிறப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக வருகை தந்திருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாராவ் தெலுங்கு சமாஜத்தினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்…
பல சிரமங்களை எதிர்கொண்டு மிகக் குறுகிய கால அளவில் மிகச் சிறப்பாக கல்யாண உத்ஸவத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தெலுங்கு சமாஜம் உறுப்பினர்களைப் பாராட்டினார் சுப்பாராவ்.
திருமலையின் வளர்ச்சி, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாடுபடுவதாக கூறினார் சுப்பாராவ். வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்காக மேலும் சிறந்த சேவையுடன் விரைவு தரிசனம் செய்விக்கப் பட உள்ளதாகவும் தெரிவித்தார்.