― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..

இன்று வாமன ஏகாதசி! விரத பலன்..

- Advertisement -

29.08.2020 – பரிவர்த்தினி ஏகாதசி. இதனை வாமன ஏகாதசி என்றும் பார்ஸ்வ ஏகாதசி என்றும் ஜெயந்தி ஏகாதசி என்றும் வழங்குவர்.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார்.

ஓ யுதிஷ்டிரா !!! விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். அந்த ஏகாதசி நாட்களில் மிகவும் மேன்மையானது இந்த வாமன ஏகாதசி. மோட்சப் ப்ராப்தியை எளிதில் அடைவதற்கு மார்க்கத்தை அருளும் இந்நாளுக்கு இணையாக எந்த ஏகாதசி நாளும் இல்லை என்று அருளினார்.

எவரொருவர் இந்நாளில் இறைவன் மகாவிஷ்ணுவை வாமனராக உருவகப்படுத்தி வழிபடுகிறாரோ, அவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒருசேர வழிபட்ட புண்ணியத்தை பெறுவதோடு, இறுதியில் மோட்சப் பிராப்தியும் அடைவர்.

மேலும் இந்த ஏகாதசி நாளில், இதன் சிறப்பை காதால் சிரத்தையுடன் கேட்பவருக்கும், அவரது பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் மகத்தான நாளாகும். இந்த ஏகாதசி மகாத்மியத்தை இந்நாளில் பக்தி சிரத்தையுடன் காதால் கேட்பவர் இறுதியில் தேவலோகத்தை அடைந்து, சந்திரனைப் போல ஒளியுடன் வாழ்வர் என்றும் அருளினார். மேலும் இந்நாளில் உபவாசம் இருந்து இறைவன் வாமனரை வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான புண்ணியம் பெறுவர் என்று கூறி அருளினார்.

அத்துடன், இந்நாளில் உபவாசம் இருப்பவரது பாவங்கள் அனைத்தையும் அழித்து, உயர்வு அளிப்பதால் இதனை ஜெயந்தி ஏகாதசி என்று வழங்குவர். மேலும், யோகநித்திரையில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணு, இந்நாளில் தனது சயனக் கோலத்தை மாற்றுவதால் இந்நாள் மிகவும் மங்களகரமானது. எனவே இது பரிவர்த்தினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா யுதிஷ்டிரனிடம், ஓ தர்மபுத்திரா !! கேட்பவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கும் மகிமை வாய்ந்த இக்கதையினை உனக்கு கூறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூற ஆரம்பித்தார்.

திரேதாயுகத்தில் பலி என்றொரு அரசன் இருந்தான். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் இவன் மிகுந்த நற்குணங்கள் உடையவனாகவும், தர்மசீலனாகவும் விளங்கினான். எனினும் உலகை தனது குடையின் கீழ் ஆட்சிக்கு கொண்டு வர நினைத்தவனாய், தேவர்களுடன் போரிட்டு அவர்களை வென்று சுவர்க்கத்தை இந்திரனிடமிருந்து கைப்பற்றினான். எனவே தேவர்கள் அனைவரும் இறைவன் ஸ்ரீஹரி விஷ்ணுவை சரணடைந்து அவரை பாடித் துதித்து அவர்களது இன்னலைக் கூறி பலியிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தருமாறு வேண்டினர்.

எனவே அவரும் அவர்களைக் காப்பதாக வாக்களித்தார். அதன்படி, ஸ்ரீஹரி விஷ்ணு, பூலோகத்தில் காஷ்யப முனிவருக்கும், அதிதி தேவிக்கும் தாமரை இதழ்களை ஒத்த கண்களுடன், மூன்று அடிக்கும் குறைவான குள்ள வடிவம் தாங்கி வாமனராக அவதரித்தார்.

உலகை வென்ற பலிச் சக்கரவர்த்தி, யாகம் ஒன்றை நிகழ்த்தினான். அப்போது அங்கே வந்த வாமனர் அவனிடம், தானமாக மூன்றடி நிலம் கேட்டார். அரசனும் உடனே தாமதிக்காமல், அதற்கு ஒப்புக் கொண்டான். அவன் வாக்களித்தவுடன் இறைவன் ஸ்ரீஹரி, திரிவிக்ரமனாக உயர்ந்து விஸ்வரூபம் கொண்டார். அவரது பாதம் புவியையும், தொடை புவர்லோகத்தையும், இடுப்பு சுவர்க்கலோகத்தையும், வயிறு மகர்லோகத்தையும், மார்பு ஜனலோகத்தையும், கழுத்து தபோலோகத்தையும், தலை சத்யலோகத்தையும், முகம் ஏனைய படைப்புகளையும் அளந்து நிறைவு செய்தது.

இந்த விஸ்வரூபத்தினைக் கண்ட அனைவரும் அவரை பாடித் துதித்து வணங்கினர். பின்னர் அவர் பலியிடம், ஓ குற்றமற்றவனே !! பூலோகம் முழுவதையும் என் பாதத்தினாலும், மேலுலகம் அனைத்தும் மற்றொரு பாதத்தினாலும் அளந்து விட்டேன். வாக்களித்தபடி, 3வது அடி நிலத்திற்கு நான் என் பாதத்தினை எங்கு வைப்பது என்று கேட்டார்.

உடனே பலி மிகவும் பணிவுடன் சிரம் தாழ்த்தி, 3வது அடியினை அவனது சிரசில் வைக்கக் கூறினான். அவனது பணிவைக் கண்டு அளப்பரிய மகிழ்ச்சி கொண்ட இறைவன் ஸ்ரீஹரி அவன் சிரசில் கால் வைத்து அமிழ்த்தி அவனை பாதாள உலகின் அரசன் ஆக்கினார்.

இறைவனின் விஸ்வரூப தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் கொண்ட பலிச் சக்கரவர்த்தி, அங்கே இறைவன் ஸ்ரீஹரியின் பிரதிமை ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினான். அப்போது பகவான் விஷ்ணு அவனிடம், அவன் இருக்கும் இடத்தில் தான் என்றும் நிரந்தரமாக வசிப்பேன் என்று அருள் புரிந்தார்.

இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுவித்து உயர்வை அளிக்கும் இந்த விரதத்தினை மிகவும் கவனத்துடன் முழு உபவாசம் பின்பற்றி, இரவில் கண் விழித்து இறை நாமம் கூறி, அவரை வணங்கி வழிபட வேண்டும். முடிந்தவரை, தயிர் சாதம் மற்றும் சிறு அளவு வெள்ளியை வேத அத்தியயனம் செய்யும் பண்டிதர்களுக்கு தானம் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

இறைவனுக்குரிய சாதுர்மாஸ்ய காலத்தில் தோன்றும் இந்த பரிவர்த்தினி ஏகாதசியை மிகுந்த கவனத்தோடு, நியமம் தவறாது கடைபிடிப்போர் இவ்வுலகில் இகபர சுகங்களோடு வாழ்வது மட்டுமின்றி, இறுதியில் வைகுண்ட பிராப்தியையும் அடைவர் என்று பிரம்ம வைவர்த்த புராணமும், பவிஷ்ய புராணமும் கூறுகிறது.

குறிப்பு: இதற்கு அடுத்த நாள்,வாமன துவாதசி என்றழைக்கப்படும். இன்று ஏகாதசி விரதத்தினை 1வேளை உணவோடு முடித்து கொண்டு, அந்த நாளிலும் வாமனரை வணங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version