பாஞ்சால நாட்டை சேர்ந்த ஆருணி என்பவன் தௌமிய மகரிஷியின் சீடனாக இருந்தான்.
மிகவும் சிரத்தையுடன் தேவையான பணிவிடைகளை யெல்லாம் செய்துகொண்டிருந்தான். ஒருநள் தௌமிய மகரிஷி அவனை தம் வயல்களுக்கு அனுப்பிஅங்கிருந்த ஒரு அணையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்து விட்டு வருமாறு கட்டளையிட்டார்.
நீர் வழிந்து கொண்டிருந்த அந்த ஓட்டையை அடைப்பதற்கு ஆருணி எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் அந்த விரிசலை அடைக்க முடியவில்லை. கடைசியில் தன்னுடைய உடலையே அணையாக வைத்துக்கொண்டு அதை தடுத்தான். நேரம் சென்று கொண்டிருந்தது. ஆசிரமத்தில் மகரிஷி ஆருணி எங்கே என்று கேட்க சீடர்கள் எல்லாம் சேர்ந்து அவனை தாங்கள் அணையை சரி செய்வதற்காக அனுப்பினீர்கள் என்று நினைவு படுத்தினார்கள் அவர்களை அழைத்துக்கொண்டு தேடுவதற்கு புறப்பட்டார்.
குழந்தாய் எங்கிருக்கிறாய் என் அருகில் வா என்று அழைத்துக் கொண்டே சென்றார். குருவின் வார்த்தைகளைக் கேட்ட ஆருணி உடனே எழுந்து நின்று அந்த விரிசலை முடிந்த அளவிற்கு மண்ணையும் கல்லையும் கொண்டு அடைத்து விட்டு வெளியில் வந்து நின்றான்.
குருவிற்கு தன்னுடைய நமஸ்காரங்களை சமர்ப்பித்து விட்டு நடந்த நிகழ்ச்சிகளை அறிவித்தான். தங்களுடைய அடுத்த கட்டளையை கூறினால் அதை நிறைவேற்ற சித்தமாக இருக்கிறேன் என்று தாழ்மையுடன் தெரிவித்தான். ஆருணியின் மகத்தான குரு சேவையைக் கண்டு மனம் மகிழ்ந்த குரு, நீ செய்த உன்னத காரியத்தினால் உத்தாலகா என்ற பெயர் பெற்று கீர்த்தி அடைவாயாக. நீ என் கட்டளையை நிறைவேற்றி விட்டாய் எல்லா வேதங்களையும் மற்றும் தர்ம சாஸ்திரங்களையும் இப்பொழுதே அறியக்கடவது எனக் கூறி ஆசிர்வதித்தார். உத்தாலகா அத்தருணமே ஆழ்ந்த புலமை பெற்ற மகா பண்டிதன் ஆக ஒளி வீசினான். எவன் தன் குருவினிடத்தில் அளவில்லா பக்தியை கொண்டிருப்பானோ அவன் அந்த மகாத்மாவின் கருணையினால் சம்பிரதாயப்படி எவ்வித கல்வியும் பயிலாமலே பேரறிஞனாகவும் புத்திமானாகவும் உன்னதமானவனாகவும் திகழ்வான்.