ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள். இதற்கு மேரு மலைதான் மத்தாக பயன்பட்டது. விஷ்ணு ஆமை ரூபத்தில் வந்து மலையை தாங்கி பிடித்துக் கொண்டார். வாசுகி கயிறாக இருக்க உதவியது. வால் பகுதியை தேவரும் தலைப்பகுதியை அசுரரும் பிடித்து கடைய ஆரம்பித்தார்கள். துரதிஷ்டவசமாக ஆலகாலம் எனும் கொடிய விஷம் பாற்கடலில் முதலில் வெளிப்பட்டது. விஷமானது எல்லா உலகத்திலும் பீதியை உண்டு பண்ணியது. இதனால் அண்ட சராசரங்கள் யாவும் அழிந்து விடக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இத்தருணத்தில் சிவபெருமான் அங்கே தோன்றினார். சிறிதளவும் பயமின்றி உள்ளங்கையில் வைத்துக்கொண்டு சுவையான பாயாசம் குடிப்பது போல அதை உறிஞ்சி குடித்தார். தமது தேகத்தின் உள்ளே வசிக்கும் எண்ணற்ற ஜீவராசிகள் அவ்விஷத்தால் துன்புறும் என நினைத்து கருணை கடலான சிவபெருமான் விஷத்தை உள்ளே விடாமல் கழுத்திலேயே நிறுத்திக்கொண்டார். மகான்களின் செயல்களும் இப்படித்தான் இருக்கும் மற்றவர்களின் நன்மைக்காக அவர்கள் தங்கள் நலன்களை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.
ஒருவன் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு தனது மாலை வேளை சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது உதவிக்காக யாரோ கூப்பிடும் குரல் கேட்டு அவன் கவனம் சிதைந்தது. ஒரு சிறுவன் நீரில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். மரணத்தின் பிடியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அந்த பையன் கூச்சலிட்டான். இந்த மனிதனோ நான் இப்பொழுது சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கிறேன் பாதியில் எப்படி எழுந்து போக முடியும் என்று நினைத்தான். அந்தப் பையன் மூச்சுத்திணறி இறக்கும் தருவாயில் இருந்தான். அப்பொழுதும் இந்த மனிதன் தனது இருக்கையை விட்டு அசையாமல் இப்பொழுது நான் எழுந்து செல்வது தகாத செயலாகும். இந்த பையன் நீரில் மூழ்கி கொண்டிருப்பது உண்மைதான். ஆனால் துரதிஷ்டவசமாக என்னால் இப்பொழுது அவனை காப்பாற்ற முடியாது என்று எண்ணி சந்தியாவந்தனம் தொடர்ந்தான். சற்று நேரத்தில் அந்த பையன் ஜலசமாதி அடைந்தான்.
பிறருக்கு உதவி புரியும் நிலையில் நாம் இருந்தால் அதனை செய்வது தான் சரியாகும். சந்தியாவந்தனம் என்பது நல்ல காரியம்தான் சாதாரண சூழ்நிலைகளில் செய்து கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து சென்று வேறு வேலையை கவனிப்பது என்பது தவறு. ஆனால் இப்படிப்பட்ட ஆபத்தான சந்தர்ப்பங்களில் அவர் எழுந்து சென்று அவனைக் காப்பாற்றி விட்டு பிறகு சந்தியாவந்தனத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.