காஞ்சிபுரம்:
காஞ்சியில் அமைந்துள்ள சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
காஞ்சி மடத்தில் உள்ள பீடாதிபதிகள் அனைவருக்கும் இந்த்ர சரஸ்வதீ என்ற பட்டம் உண்டு. முன்னர் இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளால் கண்டெடுக்கப்பட்ட தமிழ் ரத்தினம் ஸ்ரீ ஜயேந்திரர். இருள்நீக்கி இருள் மண்டிக் கிடந்த இடங்களில் எல்லாம் ஆன்ம ஒளி கூட்ட சன்யாச பீடத்தை அலங்கரித்த புண்ணியர்.
மடம் என்பது ஆன்மிக விஷயங்களுக்கு மட்டும்தான் என்று மடிசஞ்சிகள் கூறிக் கொண்டிருந்த காலத்தில், துணிந்து, சமூக நலப் பணிகளில் மடத்தின் அன்றாட நடவடிக்கைகளை திசை திருப்பியவர். இந்து சமூகத்தின் ஒரு பிரிவினர் மடத்துக்கு அன்னியப் பட்டு ஒதுங்கியிருந்த காலத்தில், அவர்களை நோக்கி மடத்தின் ஆன்மிகத் தொண்டுகளை எடுத்துச் சென்றவர். இதனாலேயே பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வ்தி சுவாமிகள்.
மதமாற்றங்கள் நிகழும் இடங்கள் என கருதப்பட்ட இடங்களில் சுவாமிகளால் துவங்கப்பட்ட அமைப்புகள் சென்றன. இந்து சமூகத்தின் அங்கம் இவை எனக் கூறி, தொண்டுகளைச் செய்யத் தலைப்பட்டன. காஞ்சி மடத்துக்கு பெரிய அளவில் அரசியல் ஆதரவும் அதன் மூலமாகவே பின்னாளில் சதி வழக்குகளில் சிக்கிக் கொண்டதும் தனிக் கதை.
ஆயினும், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும், வட இந்தியாவிலும் இவர் ஆற்றிய தொண்டுப் பணிகள் இன்றளவும் மக்களால் நன்றி கூரப்படுகின்றன. நாடெங்கும் காஞ்சி மடத்துக்கு அன்பர் கூட்டம் பெருகக் காரணமாக இருந்ததும் ஸ்ரீஜயேந்திரரின் சமூகத் தொண்டுப் பணிகள்தான்!
இன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக… இந்தப் படங்கள் தொகுப்பு!