புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழக கேரளா எல்லைப்பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமியம்மாள் சமேத சதாசிவமூர்த்தி தட்சிணாமூர்த்தி ஆலயம் சிறந்த குரு பரிகார ஆலயமாகும்.
சுமார் 500ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருபகவான் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலித்து வருகிறார்.
இங்கு குடிகொண்டுள்ள சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்திக்கும் ஆண்டு தோறும் ஐந்தாம் திருநாளில் தை திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல இந்தாண்டு தை திருவிழா கடந்த 20-ம் தேதி துவங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை வழிபாடுகள் நடந்தது.
இந்தநிலையில் ஐந்தாம் திருநாளான நேற்று இரவு 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருக்கல்யாண விழாவுக்கான ஏற்பாடுகளை கடந்த 32 ஆண்டுகளாக மண்டகப்படிதாரர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொழிலதிபர் நெல்லை கணேசன் அன் பிரதர்ஸ் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.