அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்?
இது குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்பதுண்டு. சில சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பதில் சொன்னாலும், இது குறித்து முக்யமான தகவலை இங்கு பரிமாறிக் கொள்கிறேன். ஸ்ரீமத் வால்மீகி ராமாயண மாகாத்மியம், ஸ்காந்த உப புராணத்தில் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு விதமான பலன்களை விரும்புபவர்க்கு, ராமாயணத்தின் ஒவ்வொருவிதமான பாராயண முறைகள் சொல்லப்படுகின்றன. ஜோதிட சாத்திரத்தின்படியும் தசாபுத்திகளுக்கு இந்நூலில் பாராயணமுறை காண்பிக்கப்படுகிறது. இதற்குரிய அட்டவணையும் தரப்படுகிறது. ஒரு மாத பாராயணம், இருபத்தியேழு நாட்களில் பாராயணம், ஒரு வாரத்தில் பாராயணம் என பலவிதமான பாராயண முறைகள் இந்நூலில் உள்ளன.
அதுதவிர, ஒவ்வொரு கட்டம் (நிகழ்வு) படிக்கப்படும்போதும், என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும்? என்பது குறித்துக் குறிப்புகளும் உண்டு. அதில்தான் வடை, வெற்றிலை குறித்து விளக்கங்கள் உள்ளன.
கிஷ்கிந்தா காண்டத்தில் மூன்றாவது ஸர்கம் பம்பா நதிக்கரையில் அனுமான் ராமபிரானைக் காண்கிறார். இதொரு ஆச்சர்யமான ஸர்கம். அனுமன் ராமனைப் போற்றுவதும், ராமன் அனுமனைப் போற்றுவதையும் இங்கு காணலாம். இந்த ஸர்கம் பாராயணம் செய்தால் நெய்யில் பொரித்த அறுபத்திநான்கு வடைகளை நிவேதனம் செய்ய வேண்டுமாம்.
பம்பாதீரே ஹநூமதா ராகவஸ்ய ஸமாகமே |
மாஷா பூபாந் க்ருதே பக்வாந் சது:ஶஷ்டிம் நிவேதயேத் ||
அதேபோன்று, சுந்தரகாண்டத்தில், அனுமான் சீதையைக் காணும் சமயம் (15ம் ஸர்கம்), புளியோதரையுடன் தாம்பூலத்தை நிவேதனம் செய்து சம்ர்ப்பிக்க வேண்டும்.
ஹநூமஸ்து ஜாநக்யா தர்சநே ஸோபதம்சகம் |
ஆன்னம் அம்ல ரஸோபேதம் தாம்பூலம் ச நிவேதயேத் ||
என்றுள்ளது. ஸ்ரீராமசந்த்ரமூர்த்திக்கு இவைகளை நிவேதனம் செய்யச் சொன்னாலும், ப்ரதான நாயகனாகிய அனுமானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதுதவிர ப்ரமாணங்களின் அடிப்படையில் வேறு கதைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.
“சீதை வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலை பறித்து அனுமானுக்கு மாலையிட்டாள்” என்பதை சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் வ்யாபாரிகளைத் தவிர மற்றவர்கள் கொடியிலிருந்து நேரடியாக வெற்றிலை பறித்தால் தோஷம் என்பது சாஸ்திரம். தனக்கும், அனுமனுக்கும் தோஷம் விளைவிக்கும் இச்செயலை சாஸ்திரமறிந்த சீதை செய்திருக்க முடியாது.
இதிலும் பெரியோர்கள் இசைந்த ப்ரமாணம் இருப்பின் தெரிவித்திட வேண்டுகிறேன்.
அன்புடன்,
ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.
Sri APN Swami.
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..