ஆன்மிகம் வேலை செய்கிறதா?
ஒரு நண்பர் வந்தார். இன்னொரு நண்பரைப் பற்றிச் சொன்னார்.
“சார்…. முன்ன மாதிரி அவர் இல்லை….”
“என்ன?”
“தினசரி காலை 1 மணி நேரம் மாற்றி மாற்றி டி.வி.யிலே ஆன்மிகம் தான் பார்க்கிறார்”
“நல்ல விஷயம் தானே…”
“நிறைய குறிப்பு எடுத்துக் கொண்டு கோயில், குளம் என்று போய் விடுகிறார்….”
“அருமை…. ஆன்மிகம் வேலை செய்கிறது என்று சொல்லுங்கள்…”
“ஆமாம்…. ஆனால்….?”
“என்ன ஆனால்?”
“முன்ன மாதிரி இல்ல சார். முன்பு ரொம்ப மென்மையா எல்லோரையும் அனுசரிச்சிப் பேசுவார். நல்ல குணம். முரட்டுத்தனம் இருக்காது. இப்ப அப்படியே மாறிட்டார்”
“…………………………….”
என்னுடைய வருத்தமே இதுதான். எந்தச் சமயத்தை பின்பற்றுபவராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் ஆன்மிகத்தில் ஊற ஊற கீழ்க்காணும் மாற்றங்கள் ஏற்பட்டே ஆக வேண்டும்.
- பிறரிடம் அன்பு அதிகரிக்க வேண்டும்.
- எல்லோரும் வாழ வேண்டும் – எல்லா உயிரினமும் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகரிக்க வேண்டும்.
- பணத்தில் உள்ள அதீத பிடிமானம் – ஓரளவு குறைய வேண்டும்.
- நல்ல விஷயங்களைக் கவனிப்பது, ஆதரிப்பது – பின்பற்றுவது – பின்பற்றுவதற்கு இடைவிடாது முயற்சியாவது செய்வது என இவைகளில் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.
- சாதாரண விஷயங்களில் ஏற்படும் துக்கம், குறைய வேண்டும்.
- கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய வேண்டும்.
- அடுத்தவர் விஷயங்களை ஆராய்வது – இடைவிடாமல் குறையைச் சொல்வது குறைய வேண்டும்.
- பிறரைப் பற்றி நிந்தித்துக் கொண்டேயிருப்பது குறைய வேண்டும்.
- ஏழைகளைப் பற்றிய இரக்கம் அதிகரிக்க வேண்டும்.
- எல்லா நல்ல விஷயங்களிலும் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.
துணி வெளுப்பது போல் – ஆன்மிகத்தால் மனம் வெளுக்க வேண்டும். … …. …. … …
பாரத நாட்டுக்கு உள்ள பெருஞ்சிறப்பு ஆன்மிகம்தான்.
நிலைத்த பொருள் – நிலைத்த இன்பம் – எனச் சிந்திப்பதுதான் பாரத நாட்டின் பெருமை. அதனால்தான்,
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம் –
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்! என்றார் பாரதி.
இந்தப் பெருமையை உணர வேண்டும். இது வெறும் பேச்சிற்கல்ல; பின்பற்றுவதற்கு என்பதை உணர வேண்டும்.
ஆனால் இன்றைய நிலை என்ன? எதனால் இந்த நிலை? இதனை மாற்றுவதற்கு என்ன வழி?என்பதைச்சிந்திக்கும்போது ஏமாற்றம் தான் வருகிறது.
அடிதடி, சொத்துத்தகராறு, வம்பு வழுக்கு என்று நீதிமன்றங்களில் எக்கச்சக்க வழக்குகள் தேங்கி நிற்கின்றன. பெரும்பாலோர்களுக்கு அவர்கள் ஆயுள் காலத்தில் நீதி கிடைப்பதில்லை. வழக்கறிஞர்கள் பல வித சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வாதிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆன்மிகம் செழித்த நாடு என்று நம் நாட்டை பெருமையாகப் பேசுகிறோம்! ஆனால் நிலைமை இப்படியிருக்கிறது!
ஆன்மிகம் என்பது மனச்சான்றின் உண்மை தான். அதனால் தான் எந்த பெரிய விஷயத்தையும் மனதிற்குச் சொன்னார்கள்.. ஆன்மிகம் என்பதன் அர்த்தம் தெரியாததாலும், அர்த்தம் தெரிந்தும் பின்பற்றாததாலும் வந்த நிலை இது.
ஆன்மிகம் தன்னை உணர வைக்கும். தன்னை உணர்ந்தவன் நியாயத்தையும் உணர்வான். நியாயத்தை உணர்ந்தவர்களுக்கிடையே எதற்காக வம்பு வழக்குகள் வரப்போகின்றன? நீதிமன்றங்களைப் பற்றிச் சொல்கிறோம். பல நீதிமன்ற வளாகங்களில் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன்.
1979 – ஆம் ஆண்டு. மூன்று வருடங்கள் நான் பணி புரிந்த அலுவலகத்தின் அருகிலே நீதிமன்றம். அங்கு வருபவர்களை விசாரிக்கும்பொழுது பற்பல வழக்கு விபரங்களைச் சொல்வார்.
ஒரு சின்ன உதாரணம்.
அண்ணன் தம்பி இருவருக்கிடையே ஓர் உரிமையியல் தகராறு. பாகப்பிரிவினை தகராறு. யாரோ ஒருவர் ஏமாற்றிவிட்டார்கள்.
ஏமாற்றியவனுக்கு நன்றாகவே தெரியும். தான் நியாயமாக இல்லை என்று! செலவு செய்து வாதாடி பல நேரங்களில் இவர்களைப் போன்றோர்கள் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்!
வாழ்வின் உண்மைகளை உணர்ந்தவனாக இருந்திருந்தால் வழக்கு தொடர வேண்டிய அவசியமேயில்லை.
உலகில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வு மனிதனின் அணுகுமுறையில் தான் அடங்கியிருக்கிறது.
நியாயங்களை நாம் யாருக்கும் சொல்லித் தெரிய வைக்க வேண்டிய அவசியமேயில்லை. அநேகமாக எல்லோருமே நியாயங்களை உணர்ந்தவர்கள்தான்.
வேண்டுமானால்,
அவர்களை நேரடியாக பாதிக்காத – சம்பந்தப்படாத ஓர் பிரச்சினையைச் சொல்லி எது நியாயம் என்று கேட்டுப் பாருங்கள். அநேகமாக 95% பேர், சுப்ரீம் கோர்ட் நீதிபதியை விட நன்றாகவே அலசி மிகச் சரியாகத் தீர்ப்பு சொல்வார்கள்.
ஆனால், அதே வழக்கில் அவரோ அவர் சம்பந்தப்பட்டால் தீர்ப்பு மாறும். தராசு சாயும்.
அப்படியானால் நியாயத்தைத் தெரியாமல் சாய்க்கவில்லை.
நியாயத்தைத் தெரிந்தே சாய்க்கிறார்.
அவரை அப்படிச் சாய்க்கவைப்பது சுயநலம்.
தெய்வத்திற்குப் பயந்து என்று ஓர் வார்த்தையை கிராமத்தில் சொல்வார்கள்.
இங்கே யாரும் தெய்வத்தையோ, தெய்வ தண்டனையையோ, மனச்சாட்சியையோ, நியாய அநியாயங்களையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. எந்தப் பிரச்சினையும் தீராமல் இருப்பதற்கு இதுதான் காரணம் .விழிப்புணர்வு இல்லாத ஆன்மிகத்தால் தெய்வத்திற்கோ, மனிதர்களுக்கோ ஆவது என்ன?
– எஸ். கோகுலாச்சாரி
(ஆசிரியர், ஆலய தரிசனம்)