மனிதனுக்கு நீதியும் நேர்மையும் எங்கிருந்து வருகின்றன? ஏதோ ஒரு அரசியல் கொள்கைக்குக் கட்டுப்பட்டு இருந்தால் மனிதனிடம் நீதி நேர்மை வந்துவிடுமா? அந்த அரசியல் கொள்கை ஒருவேளை நீதி நியமங்களை ஆதாரமாகக் கொண்டிருந்தால் அந்தக் கொள்கையை பின்பற்றும் மனிதர்களிடமும் நீதி நேர்மை இருக்கும். ஒரு கட்சியில் இருக்கும் நேர்மையின் பலம் அந்தக் கட்சித் தொண்டர்களிடமும் கட்டாயம் இருக்கும்.
ஆனால் இன்று எந்த அரசியல் கட்சியானாலும் ஒரே குறி அதிகாரம் பெறுவதே! அதிகாரத்தைக் கொண்டு அந்த கட்சிக்காரர்களும் பிற தோழமையும் லாபம் பெறுவதுதான் இலக்கு. அதிகாரத்திற்காக அரசாட்சியில் அக்கிரமங்களில் ஈடுபட்டு போட்டியாளர்களை தோல்வி அடையச் செய்வது வழக்கமாகிவிட்டது. இதற்கு நீதியோ நேர்மையோ கொள்கைகளோ குறுக்கே வருவதில்லை.
மனிதனுக்கு நீதி நேர்மை எங்கிருந்து கிடைக்கும்? அவனுடைய சம்பிரதாயம், பண்பாடு, அவன் வளர்ந்த சூழல். அவனுக்கு அறிவுறுத்தப்பட்ட போதனைகளில் அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு தனி மனித வாழ்வில் நீதி நேர்மையை கடைப்பிடிப்பான். இதன் பெயர் நம் நாட்டில் மத விசுவாசம்.
கடவுள் மீது இருக்கும் நம்பிக்கை, பாவம் செய்ய அஞ்சுவது, புண்ணியத்தின் மீது விருப்பம் இவையனைத்தும் சேர்ந்து அவனிடம் தனி மனித விழுமியங்களை ஏற்படுத்தும். அந்த தனி மனித மதிப்புகளோடு தியாகம் முதலான உத்தம குணங்களும் சேர்ந்து தெய்வீகத் தன்மையை அடைகிறான்.
நீதி, நேர்மை, மனித விழுமியங்கள் இவை மனிதனின் உயர்வுக்கு ஆரம்பப் படிகள். அரசியலில் நுழைபவர்களின் வளர்ப்பு, நடத்தை மற்றும் பண்பாட்டின் மீது அவர்களின் அரசியல் வாழ்க்கை ஆதாரப்பட்டுள்ளது.
நம் தேசத்தில் பழங்காலத்தில் யுத்தம் செய்யும் போது கூட சில நீதி நியமங்களைக் கடைபிடித்தார்கள். அப்படிப்பட்ட பாரதீயம் தற்போது என்னவாயிற்று? அது அழியவில்லை. நலிவுற்றுள்ளது.
வெளிநாட்டு நாகரிகத்தின் தாக்கம், செல்வத்தின் மீது பற்று, கல்வி அமைப்பில் பாரதீயம் குறைவுபட்டிருப்பது போன்ற காரணங்கள் பல உள்ளன.
ஒருபுறம் நம் சம்பிரதாயங்களையும் பாரதீயத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியை பலர் செய்து வருகிறார்கள். ஆனால் அத்தகைய பாரத தேசத்தை காக்கும் முயற்சிகளுக்கு அனேக அரசியல் கட்சிகளும் அரசாட்சி அமைப்பும் சில மேதாவி வர்க்கங்களும் முழுவதுமாக எதிர்ப்பு தெரிவிப்பதைக் காண்கிறோம்.
நம் பிரச்சனை எல்லாம் இங்கேதான் உள்ளது. அந்த மனிதர்களில் மிக அதிக சதவீதம் பேர் வெளிநாட்டு பொதுவுடமை வாதம் போன்ற சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, வெறும் நாத்திகவாதத்தால் விவேகமின்றி அனைத்து நல்ல சம்பிரதாயங்களையும் மறுப்பதே சுபாவமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்து மதம் என்றால் வெறுப்பைக் கக்கும் இந்த மனிதர்கள் இந்து மதத்தில் இருக்கும் மனிதர் எத்தனை உயர்ந்தவரானாலும் அவருக்கு மதிப்பளிக்க மாட்டார்கள். மத நம்பிக்கையில் முழுமையாக பாதுகாக்கப்பட்ட நீதி நேர்மை போன்ற நியமங்களை இந்து மத துவேஷம் என்ற குருட்டுத்தனம் காரணமாக இவர்கள் அறியமாட்டார்கள்.
மதத்தோடு தொடர்பற்ற நீதி நேர்மை போன்ற நியமங்கள் இதுபோன்ற மனிதர்களில் எத்தனை பேருக்கு எப்படிப்பட்ட ஸ்தாயியில் உள்ளதோ நாம் கவனிக்க முடியும்!
இந்து மதத்தின் மீது துவேஷம், சம்பிரதாயங்களின் மீது வெறுப்பு, நம் நம்பிக்கைகளை மூட விசுவாசமாகப் பார்ப்பது… இது போன்ற குணங்கள் மட்டுமே மனிதனை உயர்ந்தவனாக்காது. ஏனென்றால் அத்தகைய துவேஷத்திலேயே மனிதத்தன்மையின் குறைவு இணைந்திருக்கும்.
துவேஷத்தோடு கூட அகங்காரமும் அதன்பின் பிறர் நீதி என்று நினைப்பதன் மீது சகிப்புத் தன்மையின்மையும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மனிதனுக்கு அழிவைத் தவிர உயர்வு கிடைக்க சாத்தியமில்லை.
இந்துமதப் பழக்கவழக்கங்களில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றில் அங்கங்கு தென்படும் மூடநம்பிக்கைகள் போன்ற தோஷங்களை கவனித்து அவற்றைக் களைந்து தூய்மைப்படுத்தும் சிலர் இருக்கிறார்கள்.
ஆனால் இன்று நம் நாட்டில் மத துவேஷ மனிதர்களில் எத்தகைய உத்தம லட்சணங்களும் காணப்படவில்லை. அவர்களிடம் உள்ள சுயநலமும் வரைமுறையற்ற நடத்தையும் சமுதாயத்திற்கு எந்த விதத்தில் உதவப் போகிறது?
இன்று ஹிந்து சமூகத்தில் பிறந்த மனிதர்களிடம் நாத்திகவாதமும் லௌகீக வாதமும் ஹிந்துமத வெறுப்பும் பிரதானமாக காணப்படுகிறது.
அரசியல் நாடக மேடையில் மிக அதிகமான நடிக்கப்படுகின்ற கதாபாத்திரங்கள் இவர்களுடையதே! இந்த மனிதர்களின் இலட்சியமும் கவனமும் சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மீது இல்லை. மக்கள் நலம் நீதி நேர்மை போன்றவற்றை வளர்ப்பதில் இல்லவே இல்லை! அவர்களின் இலக்கு அரசியல் லாபமும் அதிகாரப் பேராசையும்தான்.
சமுதாய நலனை விரும்புபவர்களாக இருந்தால் கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைகளையும் ஆதாரங்களையும் வெறுக்க மாட்டார்கள். அவற்றை அழிக்க முற்பட மாட்டார்கள். துவேஷம் மற்றும் சுயநலத்தோடு சிறிது காலம் வாழ்ந்து விட்டு மறையும் சக்திகள் மட்டுமே இவை!
இந்த விஷயத்தில் முழுமையான புரிதலற்ற சொந்த அபிப்பிராயங்களோடு கூடிய மனிதர்கள் இவர்களுக்குத் துணை வருவார்கள். ஏதோ சிறந்த மனித நடத்தை இருப்பது போல வேடமிட்டு நடித்து, அனைவரையும் அவமானப்படுத்தி, தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு அலையும் இந்த மனிதர்கள் தாமாக சாதிக்கக் கூடிய சிறப்புகளோ சமுதாயத்தில் எடுத்து வரக் கூடிய மாற்றங்களோ எதுவுமில்லை. பூஜ்ஜியம்!
அவர்கள் அரசியலில் பிரவேசித்தால் அவர்கள் சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைப்பதோ செய்வதோ எதுவும் இருக்காது. நாட்டு மக்களின் அபிப்ராயங்களோடு ஒத்துப்போகாமல் அதிகாரத்தை உபயோகித்து அவர்கள் அரசு புரியும் சிறிது காலத்திற்குள் குறுகிய கண்ணோட்டத்தோடு ஏதோ சில வேலைகளைச் செய்து விட்டு மறைந்து போவார்கள்.
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய கடமை முதலில் மத்திய தர மக்களின் மீதே உள்ளது. இவர்கள் ஊர் ஊராக நூற்றுக்கணக்கான பொதுமக்களின் சங்கங்களை ஏற்படுத்தி சரியான புரிதலோடு விஷயத்தை விவாதித்து சாமானியர்களுக்குப் புரிய வைத்து மக்களை விவேகமானவர்களாக்கி சிறிது சிறிதாக பாரதீய சைதன்யத்தை எடுத்து வர வேண்டும்.
இது மிகவும் அவசியம். அவ்வாறாக சைதன்யம் வரப்பெற்ற சமுதாயம் நம் நாட்டில் நான்கில் ஒரு பங்கு இருந்தால் கூட போதும். அரசாங்கங்களை அதிகாரத்தில் அமர்த்தி அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த அரசைக் கொண்டு பொது மக்களுக்கு சேவை செய்வித்துக் கொள்ள முடியும்.
இதனையே மக்களாட்சி என்பார்கள்! இது வெறும் பகற்கனவாகி விடக் கூடாது!!
தெலுங்கில் – சத்குரு சிவானந்த மூர்த்தி.
தமிழில் – ராஜி ரகுநாதன்.