இந்தியா-ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட், இந்தூர், முதல் நாள், 01.03.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல் இன்னிக்ஸில் 109 ரன் ஆல் அவுட் (விராட் கோலி 22, கில் 21, ரோஹித் 17, பரத் 17, குன்னர்மன் 5/16, நாதன் லியன் 3/35, மர்பி 1/23) ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் 156/4 (க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26, ஜதேஜா 4/63). ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா முதலில் மட்டையாட முடிவுசெய்தார். தனது பேட்டிங் மீதும் தனது அணி வீரர்கள் பேட்டிங் மீதும் அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு டெஸ்டுகளாக நன்றாக விளையாடிய ஜதேஜா, அக்சர் படேல், அஷ்வின் ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. கடந்த இரண்டு டெஸ்டுகளாக கொஞ்சம் சுமாராக விளையாடிய ரோஹித், கோலி இருவரும் இன்று ரொம்ப சுமாராக விளையாடினார்கள்.
டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் புஜாரா 1 ரன் எடுத்தார். டெஸ்ட் மேட்சில் 200 ரன் எடுத்தவருக்கு ஆட இடம் கொடுக்கப்படவில்லை அனைவரும் வருத்தப்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்கவில்லை.
இந்திய அணி மட்டையாளர்களால் 33 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. கடைசியில் முகமது ஷமி ஒரு சிக்சர், ஒரு ஃபோர் அடித்ததால் இந்திய அணி 100 ரன்களைத் தாண்டியது.
தனது முதல் இன்னிங்க்ஸை விளையாட வந்த ஆஸ்திரேலிய அணி மிக நன்றாக விளையாடியது. 54 ஓவர்கள் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 156 ரன் எடுத்துள்ளது. இந்திய ஸ்பின்னர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியா அணி மட்டையாளர்கள் நன்றாக சமாளித்தார்கள்.
ஜதேஜா நாலு விக்கட் எடுத்தபோதும் ரன் அதிகம் கொடுத்தார். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்பின்னர்கள் வீசிய அளவிற்கு இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசவில்லை.
இது முதல் நாள். இந்திய அணி தனது ஆட்டத்தைத் திருத்திக்கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது.