அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர், தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மூலம் ரூ. 8 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திற்கு தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக ஆக.28ஆம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்கா உள்பட மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, துபை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டு, கூட்டங்களில் பங்கு கொண்டு, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும், அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்துப் பேசினார்.
அந்தக் கூட்டங்களின் போது, அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, கௌரவப் படுத்தினர். அப்போது அவர், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது குறித்த விவரங்களை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் பதிவு செய்தார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி, தமது சுற்றுப் பயணத்தின் விளைவாக, தாம் தொழில் முனைவோர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக ரூ. 8,835 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் கால்நடை வளர்ப்பை மேம்படுத்த கலப்பினப் பசுக்களை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், இன்னும் உங்களது வெளிநாட்டுப் பயணங்கள் தொடருமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நிச்சயமாக என்றார்.
வருங்காலத்தில், தண்ணீர் சிக்கனம் குறித்து அறிந்து கொள்ள இஸ்ரேல் நாட்டுக்குச் செல்ல இருப்பதாகக் கூறினார்.
மேலும், அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் உள்ளது. கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்க்கு வர உள்ளன.
கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கபட்டுள்ளது. 40 க்கும் மேற்ப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது . வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது ~ தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.