தாயுடன் கடைக்கு நடந்து சென்ற 5 வயது பெண் குழந்தை மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மல்லிகுட்டை கிராமத்தை சேர்ந்த தம்பதி அறிவரசன்-மணிமேகலை. இவர்களுக்கு வர்ஜா ஸ்ரீ என்ற ஐந்து வயது பெண் குழந்தை இருந்தது. மணிமேகலையும், குழந்தை வர்ஜா ஸ்ரீயும் அருகிலுள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்து குழந்தை மற்றும் தாய் மீது மோதினார்.
இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். மேலும், குழந்தையின் பின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் வெளியேறியது.
இதைபார்த்த அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாய் மணிமேகலை சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து தாரமங்கலம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக உள்ள கங்கானிப்பட்டியை சேர்ந்த செந்தில் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.