தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 15க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 15க்கும் குறைவான பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், பாதிப்புகளே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே 3 ஆம் தேதியோடு முடிவதாக இருந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு, கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பதன் முழு தொகுப்பு இதோ.
விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை தொடரும்.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், மால்கள், விளையாட்டு மைதானங்கள், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள், அரசியல், மத, சமூக நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.
மத வழிபாட்டுத் தலங்களுக்கான தடைகளும் தொடரும்.
அத்தியாவசியமற்ற பயணங்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயம் தடை
சிவப்பு மண்டலங்களுக்கான தளர்வுகள்:
டாக்ஸி, ஆட்டோ, பேருந்து, சலூன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கான தடைகள் தொடரும்.
கட்டுமானப் பணிகள், சிறு, குறு தொழில்கள், உணவு உற்பத்திதுறை, செங்கல் சூளைகள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் மால்கள் தவிர்த்த மற்ற அனைத்து விதமான கடைகளுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகள் அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும்.