நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், அந்தோணி. 39 வயதான இவர், திசையன்விளை நகரத்தில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தார். இரு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை மற்றும் மனைவியுடன் வசித்து வந்த இவர், ஊரடங்கால் வேலை இல்லாததால் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.
வேலை இன்றி குடும்பத்துடன் தவித்துவந்த நிலையில், நேற்று அவர் கடன் வாங்கி மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி அவரைக் கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வேலை இல்லாததால் குழந்தைகள் பசியால் தவிக்கும் நிலையில், கடன் வாங்கி மது குடித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மிகவும் வருத்தம் அடைந்த அவர், இரவில் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய திசையன்விளை போலீஸார், நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
சமூக ஆர்வலர்கள் மதுக்கடைகளை அரசு திறந்த பிறகு, மாநிலம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர், நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.
இந்த நிலையில், மூன்று கைக்குழந்தைகளின் தந்தை குடிபோதை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.