சென்னை:
சென்னை உள்பட புறநகரின் பல இடங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி ரியல் எஸ்டேட் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது விஜிஎன் குழுமம். இதன் சென்னை கிண்டியில் உள்ள விஜஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவன சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
சென்னையில் எஸ்பிஐ வங்கியை மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், விஜிஎன் டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாகவும் இந்த நிறுவனத்தின் மீது வழக்குள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் அந்த நிறுவனத்தின் ரூ. 115 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து ரூ.11 ஆயிரம் கோடி கடன் பெற்று ஏய்த்துக் கட்டி, வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி விட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், வங்கி ஏய்ப்பு தொடர்பாக சென்னையில் விஜிஎன் நிறுவனம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.