50 முட்டைகள் தின்பதாக பந்தயம். ஆனால் 42ஆவது முட்டையிலேயே முழி பிதுங்கியது. கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு, பாவம்… போய்ச் சேர்ந்தார் இளைஞர் ஒருவர்.
உத்தரப்பிரதேசம் ஜோன்பூரில் விளையாட்டாக கட்டிய பந்தயம் ஒரு மனிதரின் உயிருக்கே உலை வைத்தது.
50 முட்டைகள் தின்றால் 2000 ரூபாய் தருவதாக கூறிய பந்தயத்திற்கு அவர் உடன் பட்டார். ஆனால் 42வது முட்டை தின்னும்போதே மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சிகிச்சையில் இருந்த போதே…பாவம் மனிதர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஜோன்பூரில் உள்ள பீபீகஞ்ச் பஜாரில் நடந்துள்ளது.
சுபாஷ் டிராக்டர் ஓட்டுபவர். சுபாஷ் தன் நண்பர்களோடு முட்டை சாப்பிடுவது பற்றி பந்தயம் கட்டினார். யார் எத்தனை முட்டை தின்ன முடியும் என்பது குறித்து சர்ச்சை நடந்தது. ஐம்பது முட்டை தின்று ஒரு பாட்டில் மது அருந்த வேண்டும் என்பது பந்தயம். வென்றவருக்கு 2000 ரூபாய் அன்பளிப்பு என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.
சுபாஷ் அதனை ஏற்று முட்டைகளை தின்ன ஆரம்பித்தார். எந்த பிரச்சினையுமின்றி நாற்பத்தொரு முட்டைகளை விழுங்கி விட்டார். 42வது முட்டையை தின்னும்போது நினைவிழந்து கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் உடல்நிலை சீரியஸாகவே மருத்துவர்கள் அவரை லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறினர். அங்கு சென்று சிகிச்சை பெறுகையில் சுபாஷ் மரணம் அடைந்தார்.
சுபாஷுக்கு அண்மையில்தான் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் மனைவிக்கு நான்கும் பெண் குழந்தைகளாகவே பிறக்கவே ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தச் சம்பவம் உள்ளூர்வாசிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.