நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் பலத்த மழை காரணமாக ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
சீஸன் தொடங்கிய காலம் முதல், இதுவரை சுமாராகவே இருந்தது அருவியில் நீர் வரத்து.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மிகவும் இதமான சூழலும், மழையும், சாரலுமாக குற்றாலம் பகுதி கலகலக்கிறது. சுற்றுலாப் பயணிகள் மனம் மகிழும் வண்ணம், இதமான சாரலும் தூறலுமாக குற்றால அருவிப் பகுதிகள் காட்சி அளிக்கின்றன.
நேற்று இரவும் இன்று காலையும் பெய்த மழையில், குற்றால அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவியை ஒட்டிய வனப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு இருந்ததால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து அருவிகளிலும் பரவலாக நீர் விழுகிறது. இதை அடுத்து, ஐந்தருவியில் குளிக்க தற்காலிகமாக போலீஸார் தடை விதித்தனர்.
பின்னர் நீர்வரத்து சற்று குறைந்ததும் குளிப்பதற்கான தடையை விலக்கினர். இதை அடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
நாளை வெள்ளிக்கிழமை, தொடர்ந்து, சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்கள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.