அமெரிக்காவின் டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேற்கு டெக்சாசில் உள்ள மிட்லேண்ட் பகுதியில் வாகனத்தில் சென்ற ஒருவர், அப்பகுதியில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற போலீசார், லாரியை மடக்கி பிடித்துள்ளனர்.
அப்போது போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்து போலீசாருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். 30 வயது இளைஞரான அந்த நபர், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
டென்சாசின் எல் பாசோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் பலியான சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.