கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திவரும் நிலையில் பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த இளம் கர்ப்பிணி செவிலி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
லண்டனில் இருந்து 35 கி.மீ. வடக்கேயுள்ள லூட்டன் நகரில் உள்ள லூட்டன் அண்ட் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக செவிலியாக சேவை செய்து வந்தவர் மேரி அகியேவா அகியா போங் (29). இவர் ஆப்பிரிக்க நாடான கானாவை சேர்ந்தவர்.
கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கூட அங்கு 12 ஆவது விடுதியில் இடைவிடாது தனது சேவையைத் தொடர்ந்து வந்தார். இந்த விடுதிதான், அந்த மருத்துவமனை கொரோனா வைரஸ் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிற விடுதி. மார்ச் 12 ஆம் தேதிவரை அங்கு பணியில் தொடர்ந்து இருந்திருக்கிறார்.
இப்படி கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகளுக்காக சேவையாற்றிக் கொண்டிருந்த மேரியையும் கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டது மருத்துவ பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டது.
அடுத்த 2 நாளில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை தேறுவது போல காணப்பட்டது. ஆனால் அடுத்த ஓரிரு நாளிலேயே அவரது நிலை மோசம் அடைந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமானது. இந்நிலையில் மருத்துவர்கள் மேரிக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை முதலில் காப்பாற்றி விடுவோம் என கருதினர். அதையே செய்தனர். சிசேரியனில் மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மேரி என்றே பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
ஆனால் ஈஸ்டர் பண்டிகை நாளில், மேரி உயிரை விட்டிருக்கிறார். இது அவரது குடும்பத்தினருக்கும், உடன் சேவையாற்றி வந்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தீராத சோகத்தை தந்திருக்கிறது. இந்நிலையில் மேரியின் மரணம், சில கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
மார்ச் 12 ஆம் தேதி வரை கொரோனா விடுதி பணியில் இருந்தபோதே மேரிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்ததா? மேரி, சுய பாதுகாப்பு உடைகளையும், உபரணங்களையும் அணிந்து கொண்டு பணியாற்றினாரா? இந்தக் கேள்விக்கு முக்கிய காரணம், அந்த மருத்த்வுஅமனியில் முன் வரிசை வீரர்களுக்கான கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முக கவசங்களே ரேஷன் அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வந்ததாகவும் வெளியாகி உள்ள தகவல்கள்தான் இந்த கேள்வியை எழுப்ப வைத்துள்ளன.
மேரியின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய ஒன்று என்று ஆணித்தரமாக சொல்கிறார், கர்ப்பிணிகளின் நலனுக்காக செயல்படுகிற அமைப்பின் நிறுவனர் ஜோலி பிரர்லே. 4 வார கர்ப்பத்துக்கு உட்பட்டவர்கள் செவிலியர் பணியில் தொடரலாம் என்கிற விதியை மாற்ற வேண்டும் என மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரிக்கு கோரிக்கை வலுத்து இருக்கிறது.
கொரோனா வைரசுக்கு இதுவரை இங்கிலாந்தின் தேசிய சுகாதார பணிகள் துறையில் பணியாற்றுகிற மருத்துவர்கள், செவிலியர்கள், சார்பு மருத்துவ பணியாளர்கள் என 45 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.