மைடுகுரி (நைஜீரியா): போகோ ஹராம் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை நைஜீரியாவில் 45க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என கருதப் படும் சிலர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர். அங்குள்ள ஜபா என்ற கிராமத்துக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர், கிராமத்து வீடுகளை நோக்கி கண் மூடித்தனமாகச் சுட்டனர். பின்னர் அந்தக் கிராமத்துக்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய கிராமத்தினர் தெரிவித்தனர். மாகாணத் தலைநகரான மைடுகுரியிலிருந்து 100 கி.மீ.க்குத் தெற்கில் ஜபா கிராமம் அமைந்துள்ளது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதி என்பதால், தாக்குதல் நடந்து இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்தத் தகவல் வெளியுலகுக்குத் தெரியவந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளுர் நேரப்படி அதிகாலை 5.30க்கு இந்தத் தாக்குதல் நடந்ததாக மைடுகுரி பகுதியில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இஸ்லாமிய அரசை உருவாக்கும் முயற்சியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆயிரக் கணக்கான மக்களை இந்த அமைப்பு கொலை செய்து வருகிறது. ஆண்களையும் ஆண் குழந்தைகளையுமே குறிவைத்து அவர்கள் கொன்று வருவதாக ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.