உலகக் கோப்பை டி20 போட்டிகள் – ஒன்பதாம் நாள் – 24.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இன்று குரூப் 2 பிரிவில் இரண்டு உலகக் கோப்பை டி20 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது ஆட்டம் வங்கதேச அணிக்கும் நெதர்லாந்து அணிக்கும் இடையே ஹோபர்ட் மைதானத்தில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் ஜிம்பாபே, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அதே மைதானத்தில் நடைபெற்றது.
முதல் ஆட்டம் வங்கதேசம்-நெதர்லாந்து
வங்கதேச அணி (144/8, ஹுசேன் 38, நஜ்முல் 25, முசாத்தக் ஹொசைன் 20*, மீக்கரென் 2/21, லீட் 2/29) நெதர்லாந்து அணியை (135, ஆக்கர்மேன் 62, மீக்கரென் 24, எட்வர்ட்ஸ் 16, டஸ்கின் அகமது 4/25) 9 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது.
டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் அதன்பின்னர் ஐந்து விக்கட்டுகள் மளமளவென சரிந்து 11 ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 76/5 என்ற நிலையில் இருந்தது. அஃபிஃப் ஹொசைன், மொசாத்துக் ஹொசைன் ஆகியோரின் ஆட்டத்தால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிறகு 144 ரன் எடுத்தது.
அதன் பின்னர் ஆடவந்த நெதர்லாந்து அணியில் ஆக்கர்மென் (62 ரன்), எட்வர்ட்ஸ் (16 ரன்), மீக்கரன் (24 ரன்) ஆகியோரைத் தவிர மீதமுள்ள அனைவரும் சரியாக ஆடாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனால் ந்தர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 135 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேச அணி வெற்றிபெற்றது.
இரண்டாவது ஆட்டம் ஜிம்பாபே-தெ ஆப்பிரிக்கா
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு இரு அணிகளும் 9 ஓவர் மட்டுமே ஆடும் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. ஜிம்பாபெ அணி (9 ஓவரில் 79/5, வெஸ்லீ மத்வீரெ 35*, மில்டன் ஷும்பா 18, நிகிடி 2/20) தென் ஆப்பிரிக்கா அணி ( மூன்று ஓவரில் விக்கட் இழப்பின்றி 51 ரன்) ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. நேரமின்மையால் ஒன்பது ஓவர் ஆட்டமாக மாற்றப்பட்டது. ஜிம்பாபே அணி ஒன்பது ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 79 ரன் எடுத்தது. அடுத்து ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் டி காக் முதல் ஓவரில் நாலு ஃபோர், ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது ஓவரில் ஒரு பந்து வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு ஏழு ஓவரில் 64 ரன்னாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியின் டி காக் மீண்டும் இரண்டாவது ஓவரில் நாலு ஃபோர் அடித்தார். மூன்றாவது ஓவர் முடிந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி விக்கட் இழப்பின்றி 51 ரன் எடுத்திருந்தது. பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி தரப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இது பெரிய இழப்பு. வெற்றி பெற்று நல்ல ரன்ரேட்டும் இரண்டு புள்ளிகளும் பெற்றிருக்க வேண்டிய ஒரு ஆட்டம், மழையால் கைநழுவிப் போனது.
நாளை குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையே பெர்த் மைதானத்தில் போட்டி நடைபெறும்.