மசூத் அசார் என்ற ஒருவர் இல்லவே இல்லை; அது இந்தியாவின் ஒரு கற்பனைப் படைப்பு என்று சொல்வதுதான் பாக்கி இருக்கிறது… அதைத் தவிர அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படவே இல்லை என அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளதைக் கேட்டால் நமக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே அப்படித்தான் தோன்றும்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீதான இஸ்லாமிய மதவெறி பயங்கரவாத தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது, இஸ்லாமிய மதவெறி இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மது! பேரழிவைச் செய்தது தாங்கள் தான் என்று அந்த அமைப்பு கூறிய பிறகு, அதைத் தடை செய்ய வேண்டும் என்றும், அதன் தலைவர் மசூத் அசாரை கைது செய்து ஒப்படைக்க வேண்டு என்றும் இந்தியா வலியுறுத்தியது.
ஆனால் இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ மொஹம்மத்தான் என்று இந்தியா தகுந்த ஆதாரங்களைத் தந்து குற்றம் சாட்ட வேண்டும் என்று குறியது பாகிஸ்தான். இதை அடுத்து, இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியா.
இந்நிலையில் பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் எங்கள் நாட்டில் ஜெய்ஷ் இ மொஹம்மத் என்ற பெயரில் எந்த பயங்கரவாத இயக்கமும் இல்லை என்றார்.
ஆனால், ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மௌலானா மசூத் அசார் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
மேலும், மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று கூறினார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி!
இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அளித்த பேட்டியில் கடந்த காலத்திலும் ஜெய்ஷ் இ மொஹம்மதை இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அரசு பயன்படுத்தியது என்று கூறியிருந்தார்.
அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் தற்போது எடுத்து வரும் நடவடிக்கையை
வரவேற்கிறேன். நான் பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த போது, இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பைத்தான் பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தி வந்தது.
என்னையும் கொல்வதற்கு அந்த அமைப்பு இருமுறை முயற்சி மேற்கொண்டது. அப்போதைய சூழல் வேறு மாதிரியாக இருந்ததால், நான் அந்த அமைப்பை ஒடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கம் பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று மறுத்துள்ளார் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர். இத்தனை பேர் வலுவாகக் கூறியும், இத்தகைய பொய்களை பாகிஸ்தான் கூறி வருகிறது அந்நாட்டின் நம்பகத் தன்மையை சர்வதேச நாடுகளுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.