ஏப். 21ம் தேதி ஞாயிறு அன்று ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்துவர்களைக் குறிவைத்து சர்ச்சுகள் மற்றும் வெளிநாட்டவரைக் குறிவைத்து ஹோட்டல்கள் என எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். இது இலங்கையை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கி எடுத்த துன்பியல் நிகழ்வாக மாறிப் போனது.
நியூஸிலாந்து மசூதியில் கிறிஸ்துவர்கள் இருவர் நிகழ்த்திய தாக்குதலின் எதிர்வினையாக கிறிஸ்துவர்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று இலங்கையின் ‘பொறுப்பு’ள்ள நபர் கூறியிருப்பது வருந்தத் தக்கது. இது, பயங்கரவாதம் குறித்த சப்பைக்கட்டு மட்டுமல்ல, நியாயப் படுத்தும் மதியிலாச் செயல் என்பதையும் இலங்கை உணராமல் போனதன் விளைவு இது!
ஆனால் தனது அண்டை நாடான இந்தியாவின் அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், இன்று தவறுகளில் இருந்து இலங்கை அரசியல்வாதிகள் விரைவில் பாடம் படித்துக் கொண்டனர். அதற்கு விறுவிறுவென அவர்கள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளே சான்று!
புத்த பெரும்பான்மை நாடான மியான்மரில், உள்ளூர் கலகத்தைத் தோற்றுவித்து, மக்களைக் கொன்று குவித்து, புத்த விகாரங்களை உடைத்து, நாட்டின் மதத் தன்மையை சீர்குலைத்தார்கள் என்ற காரணத்தால் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் அங்கிருந்து அடித்து விரட்டப் பட்டார்கள். அந்த ரோஹிங்க்யாக்களுக்கு, முஸ்லிம் என்ற மதம் ஒட்டிக் கொண்டிருப்பதால், இந்தியாவில் முஸ்லிம்கள் ஆதரவாக நின்றார்கள். மட்டுமல்ல, இலங்கையிலும் இஸ்லாமியர்களின் ஆதரவு நீண்டது. அப்போதே, இன்னொரு புத்தமத நாடான இலங்கையை இஸ்லாம் குறிவைத்துவிட்டது.
இப்போது, மியான்மரில் இருந்து முஸ்லிம்களை விரட்டி விட்டதற்குப் பழிவாங்க, இலங்கையை இஸ்லாமிய பயங்கரவாதம் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால், அது எப்படிப் பட்ட சப்பைக் கட்டோ, அது போன்றது நியூசிலாந்தையும் இலங்கையையும் முடிச்சுப் போடுவது.
ஆனால், மியான்மர்-இலங்கை விஷயத்தில் ஏதோ ஒரு நூலிழை இல்லாமல் இல்லை. காரணம், இலங்கையின் போக்கு வேறுபட்டது.
விடுதலைப் புலிகளின் அழிவுக்காக சிங்களவர்களுடன் கூட்டு சேர்ந்து காய் நகர்த்திய இஸ்லாமியர்கள், தங்களது அந்த எதிரி வீழ்ந்தவுடன், இப்போது தங்களுடன் கூட்டு சேர்ந்த சிங்களவர்களையே குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள் என்பது, தமிழர்களின் எண்ணம். அது அண்மைக் கால நிகழ்வுகளில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது.
அண்மைக் காலமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை, முஸ்லீம் அரசியல் தலைவர்கள் அவர்களது சமூகத்துக்குள் இன மத உணர்வுகளையும் இன குரோதத்தையும் தூண்டும் வகையில் தமது உரைகளை நிகழ்த்தி வந்துள்ளனர். இவர்கள் தமது அரசியல் பயணத்தில் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக, இந்த உத்தியை ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், இந்த முஸ்லிம் தலைவர்களால் நிகழ்த்தப்பட்ட உரைகளின் வீடியோக்கள் பல, இணையங்களில் உலா வந்து, உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின.
இந்த வகை இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவர், ஆளுநர் ஹிஸ்புல்லா! அவரின் செயல்பாடு அண்மைக்காலமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இவருடைய செயல்பாடுகள் குறித்து, இலங்கை எம்பி., சுமந்திரன், பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லாவை பொறுத்த அளவில், ஜனாதிபதி மைத்ரீபால சிறீசேனவால், பதவி வழங்கப் பட்டவர் என்ற எண்ணம் இலங்கையில் உண்டு. இலங்கை கிழக்குப் பகுதி மக்களிடையே உள்ள கருத்துப் படி, கிழக்கில் உள்ள சமூகங்களை பிரிப்பது, தமிழ் சமூகங்களுக்குள் முடிந்தவரை பிரிவுகளை ஏற்படுத்துவது, இதற்காகத்தான் அவருக்கு பதவி கொடுக்கப் பட்டுள்ளது என்பது மக்களின் எண்ணம்.
அதனையே, எம்பி., சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்!
கொடூர குண்டுவெடிப்புகளின் பின்னே, இலங்கை அரசியல்வானில் உள்ள சில தலைவர்களின் பின்னணியை ஆராய்ந்து, அவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இந்த அளவுக்கு பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் வலுவூன்ற வைத்துள்ளது என்று இலங்கை மக்கள் அலசுகிறார்கள். இப்போது ஆளுநர் ஹிஸ்புல்லா குறித்து தங்கள் தகவல்களை அலசி சமூகத்தின் முன் வைக்கிறார்கள்.
அரசியல் சுயலாபத்துக்காக தனது சமூகத்தைப் பிரிப்பதில் தயங்காதவர் ஹிஸ்புல்லா. அமரர் அஸ்ரப்புடன் சேர்ந்து அரசியலில் சுழற்சி முறை பாராளுமன்ற உறுப்பினராக முதல் இரு வருடங்களுக்கு இருந்த இவர், தனது இரு வருட காலப் பதவிப் பகுதியின் முடிவில் ஒப்புக்கொண்டபடி, தன் சுழற்சி முறை பதவியில் இருந்து விலகவில்லை. இது அஸ்ரபுக்கு பேரிடியாக அமைந்தது.
ஹிஸ்புல்லா, எந்த ஒரு முஸ்லீம் அரசியல் கட்சிகளிலும் நீண்ட காலம் நீடித்ததாக சரித்திரமில்லை! இவர் ஒருவரால் மட்டுமே, ஒரே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா, மஹிந்த, மைத்ரீபால சிறீசேன ஆகியோருடன் நெருங்கிய நட்புடன் இருக்க முடிந்திருக்கிறது என்கிறார்கள்.
ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மறுபக்கம் பெரும்பான்மை சமூகத்துக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்தக் கொடூரத் தாக்குதலின் பின் ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் இவரது மறுபக்கம் இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
இதுவரை ஹிஸ்புல்லா சிங்கள அரசியல் தலைமைகளின் செல்லப் பிள்ளையாக இருந்துகொண்டே மதவாதத்தை முஸ்லீம் இளைஞர்களிடம் வளர்த்தவண்ணம் இருந்திருக்கிறார். இவருடைய இந்தச் செயல் இன்று பெரும்பான்மை சிங்கள மக்கள் மட்டுமின்றி முழு இலங்கையையுமே நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.