பஞ்சமி நிலங்களை தனிப்பட்ட சில குழுக்களும் அமைப்புகளுமே அதிகம் அடையாளம் கண்டு தகவல்களை வைத்திருக்கும் போது, அரசுக்கு அடையாளம் காண்பது அரசுக்கு கடினமான பணி அல்ல..! ஆனால், முரசொலி பஞ்சமி நில மீட்பு விவகாரத்தில், மாநில அரசு வேண்டுமென்றே அரசியல் சித்து விளையாட்டு ஆடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் ஆர்வலர்கள், அரசிடம் தகவல்கள் உண்டு. ஆனால், அரசுப் பணியில் உள்ள திமுக., நபர்கள், ஆதரவாளர்கள், திமுக., காலத்தில் நேரடியாகவோ முறைகேடாகவோ பணியில் சேர்ந்த அதிகாரிகள் தவறான தகவல்களைத் தந்து குழப்பவோ, அல்லது தகவல்களை மறைக்கவோ, அழிக்கவோ முற்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான அதிகாரிகள் இருந்தும், அதிமுக., வெறுமனே கையப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்க அது தயாரில்லை ! இப்போதைய ஆட்சி எந்த விதப் பிரச்னையும் இன்றி சுமுகமாக சென்றுவிட்டால் போதும் என்ற ரீதியில் கோழைத்தனமான மெத்தன செயல்பாடுகளுடன் நாள் கடத்துகிறது என்கிறார்கள் சமூக ஊடகங்களில்!
பஞ்சமி நிலம் குறித்து சில குழுக்களில் விவாதிக்கப் படும் தகவல்களில் இருந்து….
தர்மபுரி மாவட்டம் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்த கே. பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக் கொண்டார். (இவரு எந்த சாதியா இருக்கும்னு ஒரு யூகம் பண்ண முடியுது, ஆனா அது சரியான்னு தெரில).
அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க தருமபுரி கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பிறர் கைப்பற்ற உரிமையில்லை என உறுதியாகத் தெரிவித்தது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது.. (அரசாணை எண் ஜி-1/4868/90 நாள் 15.7.1991)அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில் 85,744.01ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10,922.54 ஏக்கர் நிலம் பிறரது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
பஞ்சமி நிலங்களைக் கண்டறிவது அரசாங்கத்துக்கு இயலாத காரியம் அல்ல. அதற்கென்று தனியே ஆவணங்களை இன்றுவரை வருவாய்த் துறை தனியே பராமரித்து வருகிறது.
தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட ’பஞ்சமி நிலப் பாதுகாப்பு இயக்கம்’ 1995 ஆம் ஆண்டு மேற்கொண்ட கணக்கெடுப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,398 ஏக்கர்; வட ஆற்காடு மாவட்டத்தில் 21,316 ஏக்கர், சேலம் மாவட்டத்தில் 13,601 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 11,102 ஏக்கர், தர்மபுரி மாவட்டத்தில் 9,004 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 950 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1892 ஏக்கர் உள்ளிட்ட 72142 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன.
ஒரு சிறு அமைப்பே இவ்வளவு நிலங்களை அடையாளம் காண முடியுமென்றால் அரசாங்கம் நினைத்தால் பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் அடையாளம் காண்பது கடினமான பணி அல்ல.
தலித் மக்களுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை வேறு யார் வாங்கியிருந்தாலும், ஆக்கிரமித்திருந்தாலும் அது செல்லாது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.