இந்து என்ற பெயரே வெளிநாட்டினர் கொடுக்கப்பட்டதுதானே என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக வெளிநாட்டினரால் கொடுக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒரே பெயரைக் கொடுத்தார்கள்? அவர்கள் இந்து மக்களின் மதப் பழக்க வழக்கங்களில் வித்தியாசம் கண்டிருந்தால் வேறு பெயர் கொடுத்திருப்பார்களே? புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் ஜைனர்களுக்கும் வேறு பெயர்கள் ஏன் வந்தன?
ஒரு மதத்தின் பெயர் எப்படி வந்தது என்பது முக்கியமல்ல. இன்றைய இந்தியாவில் இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் தங்களை இந்துக்களாகவே கருதிக் கொள்கிறார்கள்.
இன்னொரு எளிய உதாரணம் கூறுகிறேன். தலித் என்ற பெயர் எப்போது வந்தது? ஒரு அம்பது வருடங்களுக்குள்ளாகத்தானே? அதற்கு முன்பு அவர்கள் அரிசனம் என்று அடையாளப்படுத்தப் பட்டார்கள். அதற்கும் முன்னால் சாதிகளின் பெயர்களினால்தானே அடையாளப்படுத்தப் பட்டார்கள்? இன்று கூட அவ்வாறுதானே பல கிராமங்களில் அடையாளப் படுத்தப் படுகிறார்கள்?
இதனால் தலித் என்று ஒரு அடையாளமே இல்லை என்று சொல்லிவிட முடியுமா?
அதே போல் இந்துக்களுக்குள் வித்தியாசங்கள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அவர்களை இந்துக்களாகத்தான் பார்ப்பார்கள். முஸ்லிம்களின் ஷியா, ஸுன்னி வித்தியாசம் வெளியில் உள்ளவ்ர்களுக்குத் தெரியாதது போலவும், கத்தோலிக், பிராடஸ்டன்ட் பெந்தகோஸ்து, ஜெஹோவா சாட்சியாளர் போன்ற கிறிஸ்தவ வித்தியாசங்கள் பலருக்குத் தெரியாதது போலவும் தான் இதுவும்.