‘ சித்த மருத்துவம் என்ற பேராயுதம்’ – தமிழகத்தில் ஆளும் அரசுகளுக்கு ‘ எப்பொழுது எல்லாம் நோய் தாக்கம் குறிப்பாக தொற்று நோய்கள் ஏற்படுகிறதோ நவீன மருத்துவம் அச்சு முறியும் அளவு அழுத்தத்தில் இருக்கிறதோ, பொது சுகாதார துறையும் செய்வது அறியாது திகைகிறதோ மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறதோ அப்பொழுது மட்டும் கையில் எடுக்கும் பிரம்மாஸ்திரம் சித்த மருத்துவம்.
நிதி ஒதுக்கீடு செய்வதிலும் சித்த மருத்துவ உள் கட்டமைப்பு அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய, சித்த மருத்துவ மனித வளத்தை மேம்படுத்த தசாப்தங்களாக முன் எடுக்காத அரசுகள், நவீன மருத்துவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் சித்த மருத்துவம் பற்றி அதுவும் பொது மக்களும் ஊடகங்களும் அழுத்தம் கொடுத்த பின்னர் சித்த மருத்துவ முன்னெடுப்புகளை செய்வார்கள்.
வாழ் நாள் முழுவதும் சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையே இல்லாதது என்று ஒரு பிம்பத்தை, நிரூபணம் ஆகாதது என்று சொல்லும் ஒரு கூட்டம். போலி மருத்துவர்களை தாங்கிப்பிடிக்கும் ஒரு கூட்டம். எந்த அரசு வந்தாலும் தங்களை மட்டும் முன் நிறுத்தினால் போதும், தங்களுக்கு அதிகாரத்தில் பங்கு இருந்தால் போதும் என நினைக்கும் சிலர், போதுமான மருத்துவர்கள் மாவட்ட அளவில் இல்லாத போதும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி அரசிடம் பெயர் வாங்க நினைக்கின்ற கூட்டம் அந்த மருத்துவர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது இல்லை.
புதிய அரசு உண்மையிலேயே நல்லது செய்ய நினைக்கிறது. அவர்கள் இந்த பெரும் தொற்றை சாமாளிக்க நோய் தடுப்பில், கண்காணிப்பை சீராக்க அமைக்கும் மையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அலை குறைந்த பின்னர் சித்த மருத்துவ உள்கட்டமைப்பு சீர் செய்ய ஒரு குழுவை அமைத்து செயல்பட வேண்டும்.
இதற்கு முன்னர் மரியாதைக்குரிய சுதந்திர போராட்ட தியாகி அரசு நிர்வாக உயர் பதவியில் இருந்த திரு. லக்ஷ்மி காந்த் பாரதி அவர்கள் தலைமையில் சித்த மருத்துவ வளர்ச்சி வாரியம் செயல்பட்டு இருக்கிறது. முத்தமிழ் அறிஞர் கி ஆ பே விஸ்வநாதன் அவர்களும் தலைமை பொறுப்பில் இருந்து இருக்கிறார்.
எல்லாரும் எல்லாம் பெற வேண்டும் என்ற முதல்வரின் கருத்து Tamil Nadu Equitable Growth initiative program என்று ஒன்று அரசு சாரா வல்லுநர் குழு செயல்பட்டத்தையும் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டும்.
முந்தைய அரசு பெருந் தொற்றுக்கு ஆலோசனை வழங்க ஆயுஷ் குழு ஒன்றை ஏற்படுத்தி ஒரு சித்த மருத்துவர், இரண்டு நவீன மருத்துவர்கள் இரண்டு அரசு உயர் அதிகாரிகளை நியமித்தது. ( ஆயுஷ் குழுவிலும் நவீன மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம்) ஆனால் அந்த குழு எத்தனை முறை கூடியது என்ன பரிந்துரை தந்தார்கள் அதில் எது நிறைவேற்றப்பட்டது என்பது யாரும் அறிவார்கள்.
பெயர் அளவில் கண்துடைப்பு குழுக்கள் தேவையில்லை. விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் உண்மையான மக்கள் நலம் காக்க பொய் உரை புகழ் பாடுதலை தவிர்த்து நல்ல கருத்துக்களை சொல்லும் குழுவாக இருத்தல் வேண்டும்.