திமுக.,வின் வாரிசு அரசியல் குறித்து பரபரப்பு விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த போது, தன்மானம் கொண்ட திமுக.,வினர் சிலர் லேசாக சிந்தித்த போது, திடீரென விழித்துக் கொண்டு, முகிலன் விவகாரத்தை பொது ஊடகங்களில் விவாதப் பொருளாக்கி, சமூக ஊடகத்தின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்தது திமுக., என்ற விமர்சனம் எழுப்பப் பட்டது.
அதே நேரம், முகிலனை மையமாகக் கொண்டு, தங்கள் அதிதீவிர பிரசாரத்தை திமுக., கையில் எடுத்துள்ளது என்பதற்கு, திமுக.,வைச் சேர்ந்த மனுஷ்யபுத்திரன் என்ற அப்துல் ஹமீத் ஷேக் மொஹம்மத் தன் பங்குக்கு முகிலன் ஆதரவுக் கருத்துகளை சமூக வலைத்தளப் பொதுவெளியில் வைரலாக்கினார். அதில், அவர் எழுப்பிய கேள்விகளும், போராளிகள் பெண்களை அப்படி இப்படி பயன்படுத்த தான் செய்வார்கள்! அதில் என்ன தவறு? என்ற ரீதியில் எழுப்பிய விவகாரங்களும் சிலருக்கு பகீர் எனத் தோன்றியது.
சமுதாய போராளிகளில் காந்தி, சேகுவேரா தொடங்கிய தற்போதைய முகிலன் வரை பலரும் பெண்கள் விஷயத்தில் வீக் என்ற ரீதியில், முகிலனும் தாமரையும் என்கிற தலைப்பில் சில தினங்களுக்கு முன் மனுஷ்யபுத்திரன் ஒரு கட்டுரையை வரைந்தார். பேஸ்புக்கில் பகிர்ந்த அந்தக் கட்டுரையை முன்நவீனத்துவ சிந்தனையாளர்கள் பின் நவீனத்துவ வாதத்தை முடக்க நினைக்காத அளவுக்கு முங்கிக் குளிக்க வேண்டும் என்ற கருத்தியல் பாசிஸத்தை திணித்தார். அவரது கட்டுரை இது…!
அதிகாரத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுகிறவர்களை சொந்த விவகாரங்களை வைத்து முடக்க நினைப்பது அதிகாரத்தின் இயல்பு. அதிகாரம் ஒருவரை அழிக்க நினைத்தால் ஒன்று அவரை ‘என்கவுண்டர்’ செய்கிறது. அல்லது ‘ கேரக்டர் அசாசினேஷன் ‘ செய்கிறது. ஆனால் தாங்களும் அதிகாரத்திற்கு எதிரானவர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் அந்த ஆயுதத்தை எடுப்பதுதான் வியப்பாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விவகாரங்களில் இருவரில் ஒருவர்மீது மற்றவருக்கு புகார்கள் இருக்குமெனில் தனிப்பட்ட முறையிலோ சட்டப்படியோ அதற்கு தீர்வுகளை காண உரிமையுண்டு.
ஆனால் மக்களின் நீதிக்காக போராடும் ஒருவன் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் போது அவனுக்கு சமூகத்திடமிருந்து கிடைக்கவேண்டிய தார்மீக ஆதரவு எதுவும் கிடைக்கவிடாமல் அந்த சமயத்தில் அவனது தனிப்பட்ட விவகாரங்களை முன்னிலைப்படுத்துவது அவனை படுகொலை செய்வதற்கு சமமானது.
தருண் தேஜ்பாலை அரசும் ஊடகங்களும் மூர்க்கமாக வேட்டையாடியது அவர் ஒரு பெண்ணிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டார் என்பதால் மட்டுமா? அவரது தெஹல்கா இதழ் நடத்திய ஸ்டிங்க் ஆபரேஷன் குஜராத் கலவரத்தின் கோர முகத்தை வெளிக்கொணர்ந்தது என்பதால்தான். ஒரு பெண் விவகாரத்தை பயன்படுத்தி அவர் வேட்டையாடப்பட்டார். இது சர்வதேச அளவிலும் நடக்கிறது.
அமெரிக்கா நாடுகளை எப்படி உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்திய ஜீலியன் அசாங்கேவை நாடு நாடாக துரத்தி கடைசியில் ஒரு பாலியல் விவகாரத்தில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தியைத்தை எதிர்த்து உலகையே அதிரவைத்தவனுக்கு எதிராகவும் இந்த பாலியல் ஆயுதம்தான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற விவகாரங்களில் கண்ணை மூடிக்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்க்க குதிப்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை ஆராயும்வரை காத்திருப்பதில்லை. குற்றம் சொல்பவர் வேறு நோக்கங்கள் உடையவராகவோ வேறு யாராலோ தூண்டப்பட்டவராகவோ இருக்கலாம் என்கிற வாய்ப்பைக்கூட சிந்திப்பதில்லை. வைரமுத்துமீதான மீ டு குற்றச் சாட்டுகள் ஆண்டாள் விவகாரத்திற்குப் பிறகு எழுப்பப்பட்டது தற்செயலானதுதானா?
காணாமல் போன ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளி முகிலன் நேற்று காவல்துறையால் இழுத்துச் செல்லப்படும் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கவிஞர் தாமரையின் ‘ முகிலன் வரட்டும் ..பெண் விவகாரம் காத்திருக்கிறது’ என்ற பதிவைக் கண்டு அதிர்ந்தேன்.
முகிலன் காணாமல் போன சமயத்தில் அவருக்கு எதிராக பரப்பப்பட்ட இந்த,பெண் விவகாரம் ஒரு பேச்சுக்கு உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அப்போதுகூட அரசதிகாரத்தால் உரிமைகளுக்கான போராட்டத்தில் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா?
நாம் நம் வாழ்வின் வெளிச்சங்களாக கொண்டிருக்கக்கூடிய பல மகத்தான ஆளுமைகளின் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளின் வழியாக மட்டுமே அந்த ஆளுமைகளின் வரலாற்றுப்பாத்திரத்தை மறுக்க முடியுமா?
காந்தியின் பாலியல் சோதனைகள் மட்டுந்தான் காந்தியா? காரல் மாக்ஸுன் பணிபெண்ணுடனான உறவு குறித்த கதைகள்தான் காரல் மார்க்ஸா? எர்னஸ்டோ சேகுவேராவின் பெண் வேட்கை அவரது வரலாற்றில் ஒரு பகுதியாக நிலைத்து நிற்கிறதே…
ஆண் பெண் விவகாரங்களை நமக்குச் சொல்லப்படும் தகவல்களின் அடிப்படையில் ஏதோ ஒரு ஒற்றைப்பரினாணத்தில் புரிந்துகொண்டு யாரை வேண்டுமாலும் தூக்கில் போடுவோம் என்பது அபத்தமானதும் ஆபத்தானதுமான சூழல்.
தனிமனித உறவு சார் பிரச்சினைகளை பெரும் அரசியல் பிரச்சினைகளில் ஒரு திசை திருப்ப்புன் கருவியாக பயன்படுத்துவதை தொடர்ந்து ஏற்கப் போகிறோமா? ஒரு பெண்ணின் உறவு சார்ந்த மீறல்களை சமூக வெளியில் வைத்து விவாதித்து அவளை அவமதிப்பதை எப்படி ஏற்க முடியாதோ அப்படித்தான் ஒரு ஆண் இந்த விவகாரங்களால் பொது வெளியில் வேட்டையாடபடுவதையும் ஏற்கமுடியாது.
ஆண்களின் பலியாக பெண்களும் பெண்களின் பலியாக ஆண்களும் எந்த நேரமும் மாறக்கூடிய ஒரு பின் நவீனத்துவ பண்பாட்டுச் சூழலில் அதை அந்தத் தளத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர அரசியல் பிரச்சினைகளாக்குவது என்ன நியாயம்?
அரைவேக்காட்டுப் பெண்ணுரிமைபோராளிகள் அரசின் வேட்டைக்கருவிகளாவது பெரும் அவலம்.
தாமரை யாருடைய ஏஜெண்ட் என்பதை இந்த விவகாரம் இன்னும் தெள்ளத் தெளிவாக்குகிறது.
இந்தக் கட்டுரையின் படி, காந்தி தொடங்கி சேகுவேரா வரை பெண்கள் பிரச்னையில் சிக்காதவர்களே இல்லை என்பதும், போராளிகள் என்றால் பெண்கள் விவகாரத்தில் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்பதும், எனவே போராளிகள் குறித்த தனிப்பட்ட வாழ்க்கையான பெண் விவகாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் பொதுவாழ்க்கையை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கருத்தைப் பதிய வைக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
அதே நேரம், பெண் உரிமை குறித்து அல்லது, தன் வாழ்க்கையில் நடந்த நம்பிக்கைத் துரோகம் சிக்கல்கள் அடக்குமுறை இவை குறித்து வெளிப்படையாகப் பேசும் அல்லது பதிவு செய்யும் தாமரை போன்றவர்களுக்கு, கட்சி சாயம் பூசி அரசியல்வாதிகளாக்கும் கச்சிதமான வேலையையும் திமுக.,வுக்காக செய்து கொடுத்திருக்கிறார்!
இப்போது அவரது இந்தக் கருத்து, பெரிய அளவில் விவாதத்துக்கு ஊடகங்களில் வரவில்லை. அதற்கான காரணத்தைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!