சென்னை : 14 வங்கிகளை மோசடி செய்து சென்னையை சேர்ந்த தங்க நகை நிறுவனம் கனிஷ்க் ரூ. 824 கோடி மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளதன் மூலம் இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாட்டு வங்கிகளை மோசடி செய்து சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி தங்கள் வங்கியில் மோசடி செய்தார் தொழிலதிபர் நீரவ் மோடி என்று பிஎன்பி வங்கி கூறியது. இந்த விஷயத்திலேயே இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னையில் நீரவ்மோடி பாணியில் ஒரு மோசடி நடந்துள்ளது அம்பல மாகியுள்ளது.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் செயல்பட்டு வருகிறது தங்க நகை தயாரிப்பு நிறுவனமான கனிஷ்க். இந்த நிறுவனமும் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார்.
இந்த மோசடி தெரியவந்ததை அடுத்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சிபிஐ இணை இயக்குனருக்கு 16 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.
தங்க நகை இருப்பை அதிகமாகக் காட்டி வங்கிகளிடம் பூபேஷ் குமார் ஜெயின் மோசடியாக கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூபேஷ் குமாரும் நிரவ் மோடி பாணியில் ஏற்பாடுகள் செய்து வைத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.