மீண்டும் மோடி, பாஜக., மீண்டும் வெல்லும் என்று நேற்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உற்சாகத்துடனும் உயர்வுடனும் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன் காணப்பட்டது. இருப்பினும், பாஜக.,வுக்கு ஆதரவாக வெளியான கருத்துக்கணிப்புக்களால் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசு உயர்வுடன் காணப் பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் முதலீட்டாளர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் அதிரடியாக உயர்ந்தன.
காலை 962 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டியும் 203 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.
ரூபாய் மதிப்பும் உயர்வுடன் காணப்பட்டது. இன்றைய வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசு உயர்ந்து 69.44 ஆக உள்ளன. கடந்த வார இறுதியில் ரூபாயின் மதிப்பு 70.23 ஆக இருந்தது.