பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர்., ஸ்டூடியோஸ், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் சிவகார்த்திகேயனின் ஏலியன் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரித்து வந்த அந்த படம் நிதி பற்றாக்குறையால் கிடப்பில் கிடக்கிறது.
24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால், ஆர்.டி. ராஜாவுக்கு மிகப்பெரிய லாஸ் ஏற்பட்டது. பெரும் போராட்டத்துக்கு பின்னர், தயாரிப்பாளரான ஆர்.டி. ராஜா மீண்டும் பழைய நிலைமைக்கே சென்று விட்டார்.
வேலைக்காரன் படத்தை தொடர்ந்து, இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரு ஏலியன் படத்தை உருவாக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.
முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க போகிறார் என பல பில்டப்புகளுடன் தொடங்கிய அந்த படம், அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த படத்தை தயாரித்துள்ள கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், சிவகார்த்திகேயன் மீதுள்ள நம்பிக்கையால் அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்தது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸின் இந்த அப்ரோச்சை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன், எதுக்கு அடுத்த படம், ஏற்கனவே ஆரம்பித்து, கிடப்பில் கிடக்கும் அந்த சையின்ஸ் ஃபிக்ஷன் படத்தை தயாரிக்கலாமே எனக் கேட்க, தயாரிப்பு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளதாம்.
இதனால், 24 ஏஎம் ஸ்டூடியோவிடம் இருந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோவுக்கு அந்த படம் கைமாறுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.