மழை வெள்ளம் காரணமாக, நடிகர் அதர்வா துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரம் சிக்கிக்கொண்டார்.
நடிகர் அதர்வா, ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆர்.கண்ணன், சந்தானம் நடிக்கும் படத்தையும் அதர்வா நடிக்கும் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார்.
இதில் சந்தானம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. இதையடுத்து அதர்வா நடிக்கும் படத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆர்.கண்ணன்.
இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக, அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். அமிதாஸ் பிரதான், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் ரஷ்யா அருகில் உள்ள அசர்பைஜான் நாட்டில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது.
இந்நிலையில், அங்கு செல்வதற்காக நடிகர் அதர்வா, கடந்த சனிக்கிழமை துபாய் சென்றார். அங்கிருந்து அவருக்கு அசர்பைஜானுக்கு கனெக்டிங் பிளைட் இருந்தது.
இந்நிலையில் துபாயில் பெய்த கனமழை காரணமாக, விமான நிலைய ரன் வே வெள்ளத்தில் தத்தளித்தது. விமானங்கள் தரையிறங்கவோ, செல்லவோ முடியவில்லை. வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இதனால் நடிகர் அதர்வா, சுமார் 24 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தார். ரன் வே தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, அவர் அசர்பைஜான் தலைநகர் பாகு-வுக்குப் புறப்பட்டுச் சென்றார்.