வம்சம் தொடரில் வில்லியாக நடித்துப் புகழடைந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. நடிகர் ஈஸ்வரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். தன்னிடமுள்ள பணம், நகைகளை அபகரித்துக்கொண்டார். இதனால் குழந்தையுடன் தவித்து வருவதாக கணவர் ஈஸ்வர் மீது சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார் நடிகை ஜெயஸ்ரீ.
மூன்று ஆண்டுகளுக்குத் தன்னைத் திருமணம் செய்த ஈஸ்வர், தன்னைக் கொடுமைப்படுத்தி வந்தார். வேறொரு நடிகையுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததை நான் கண்டுபிடித்ததால் சித்ரவதை அதிகமானது என்று தன் கணவர் மீது குற்றம் சுமத்தினார் ஜெயஸ்ரீ.
இதையடுத்துக் கைது செய்யப்பட்ட ஈஸ்வர், தற்போது நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிறகு, சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.
இந்நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் நடிகை ஜெயஸ்ரீ. அவர் தூக்க மாத்திரங்களை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது சென்னையிலுள்ள நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அவர் தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், மகளே அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன். அது உனக்கும் தெரியும். நான் என் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் கண்ணா. என்னை மன்னித்துவிடு.
நான் இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது. நல்லப் பெண்ணாக இரு. உனது டான்ஸ் கரியரை ஒருபோதும் கைவிடாதே. என்னுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும். உனது தாய்க்காக நீ ஒருபோதும் வருத்தப்படாதே.
அம்மா, அக்கா என்னை மன்னித்துவிடுங்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். கணவர் ஈஸ்வரும் அவரது பெற்றோரும் என்னை இன்று இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். இந்த மனஅழுத்தத்தால் நான் கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட ஒரேடியாக சாகலாம் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்.
நான் அழைத்த போதெல்லாம் எனக்கு உதவிய உங்களுக்கு நன்றி. நான் இதற்கு மேல் வாழ விரும்பவில்லை. தற்போது எதுவும் எனக்கு சாதகமாக இல்லை. நான் வழக்கத்தை விட கூடுதலாக தூங்க போகிறேன். உணவும் சரியாக கிடைக்கவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. இது போன்ற அனுபவங்களால் நான் எங்கே பைத்தியம் ஆகிவிடுவேனோ என்ற கவலை உள்ளது.
இதற்கு மேலும் இந்த பிரச்சினைகளை என்னால் சந்திக்க முடியவில்லை. இவற்றை எதிர்த்து போராடினேன். ஆனால் இதற்கு மேலும் போராட என்னால் முடியாது. எந்த நம்பிக்கையில் இல்லை. இறந்தால் மட்டுமே நான் நிம்மதியாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.