பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவருடைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின்(60). இவர் கடந்த இரு தினங்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர காவல்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உயிரிழந்தவர் ஜேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது. பின்னர் அவரது சடலத்தை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த ஜஸ்டின் தனது குடும்பத்தினருடன் வாடகை விட்டில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.