தான் வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை சார்மி.
தமிழில், சிம்பு நடித்த ‘காதல் அழிவதில்லை’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சார்மி. தொடர்ந்து ஆஹா அப்படித்தான், பிரபுசாலமன் இயக்கிய லாடம் படங்களில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் அங்கு பல படங்களில் நடித்துள்ளார்.
இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை சார்மி, இசை அமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் உட்பட பல தெலுங்கு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இப்போது, பிரபல தெலுங்கு இயக்குனர் புரி ஜெகநாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். இவர் தயாரித்த, ஐ ஸ்மார்ட் சங்கர் என்ற தெலுங்கு படம் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து, இப்போது விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிக்கும் படத்தை இந்தி, தெலுங்கு, தமிழில் தயாரித்து வருகிறார். இதை புரி ஜெகநாத் இயக்குகிறார். இந்நிலையில் அவர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றி ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதில், வாழ்த்துக்கள் நண்பர்களே ஏன்னு தெரியுமா? தில்லிக்கும் தெலங்கானாவுக்கும் கொரோனா வைரஸ் வந்துடுச்சாம். அதைதான் கேள்விபட்டேன். அதற்காக வாழ்த்துகள் நண்பர்களே’ என்று பெரிதாகச் சிரித்தபடி தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலானது. பல ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘சீரியசான விஷயத்துக்கு இப்படியா சின்னப் பிள்ளத்தனமா வீடியோ போடுவீங்க?’ என்று கண்டபடி திட்டி இருந்தனர்.
இதையடுத்து வீடியோவை நீக்கிய சார்மி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். ‘உங்கள் கமென்ட்களை வாசித்தேன். நான் பதிவிட்ட வீடியோவுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த வீடியோ, என் முதிர்ச்சியற்ற செயலை காட்டுகிறது. இனி கவனமாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். இதையும் ரசிகர்கள் கடுமையாகக் கிண்டலடித்து வருகின்றனர்.