நடிகர் அஜித்குமார் சொன்ன அந்த வார்த்தை பலித்துவிட்டது என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்
நடிகர் அருண் விஜய், இப்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
அடுத்து அறிவழகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் தில்லியில் நடந்து வருகிறது.
அடுத்து மூடர்கூடம் நவீன் இயக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் ரஷ்யா உட்பட வெளிநாடுகளில் நடந்துள்ளது. அடுத்து விவேக் இயக்கும் பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சினிமாவில் அதிகம் போராடிவிட்டேன். என் வாழ்வில் தீப்பொறியை ஏற்றியது, என்னை அறிந்தால் படம்தான் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.
அவர் கூறும்போது, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்தேன். படம் முடிந்து பிரிமீயர் ஷோ நடந்தது. குடும்பத்தோடு பார்த்தோம். ஷோ முடிந்ததும் என் அப்பா விஜயகுமார் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். நடிகர் அஜித்குமார், அப்போது சொன்னார், ‘இந்தப் படத்துக்கு பிறகு உங்களை விக்டர்னுதான் கூப்பிடப் போறாங்க, பாருங்க’ என்று. அவர் சொன்ன வார்த்தைப் பலித்தது.
இப்போது சிறந்த கதைகளிலும் சிறந்த இயக்குனர்களுடனும் பணியாற்றி வருகிறேன். சமீப காலமாக ரொம்ப மாடர்ன் ஆன, ஸ்டைலிஷான கேரக்டர்களில் நடித்துவருகிறேன். வழக்கமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மாஞ்சாவேலு, மலை மலை போன்ற படங்களில் நடித்தது போன்ற கேரக்டர்கள் வரவில்லை.பாக்ஸர் படத்தில் மூன்றுவிதமான ஷேட் உள்ள கேரக்டரில் நடிக்கிறேன். இது வித்தியாசமான கதை.
அதே போல பக்காவான கிராமத்து கதைகளிலும் நடிக்கும் ஆசை இருக்கிறது. தேவர் மகன் போல ஒரு கிராமத்து கதை கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அப்படியொரு கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.