சென்னை:
சமூக இணைய தளங்களில் சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் தாக்கினார்கள் என்ற பரபரப்பு இன்னும் ஓயவில்லை, அதற்குள் இதற்குக் காரணம் அஜித் ரசிகர்கள் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கத்தில் வந்த தகவல் அடுத்த சூடான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. அஜித் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இதற்கான பின்னூட்டங்களும் அதிகமாக உலவுகின்றன.
நேற்று திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் செல்லுகையில் மதுரை விமான நிலையத்தில் அவர் மீது ஒரு கும்பர் தாக்குதல் நடத்தியது. அந்த கும்பல் கமல் ரசிகர்கள்தான் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு தெரிவித்து, டுவிட்டரில் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் #WeSupportSivaKarthikeyan என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி டுவீட் செய்து வருகின்றனர். இது தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கத்தில், ‘சிவகார்த்திகேயனை தாக்கியது அஜித் ரசிகர்கள் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை அஜித் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
இந்த டிவிட்டர் கணக்கும் அனைவரும் பார்க்கும் வகையில் இல்லாமல், ப்ரைவஸியுடன் கூடியதாக, அழைப்பு அனுப்பி அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பார்க்கும் வகையில் உள்ளது.
ஏற்கெனவே இவரது பெயரில் இயங்கும் டிவிட்டர் தகவலில் ‘அஜித் ரசிகர்களை வைத்து முன்னேற வேண்டாம். சொந்த முயற்சியில் சிம்பு முன்னேற வேண்டும்’ என்று குறிப்பிட்டு அது ஒரு பிரச்னையானது. அப்போது ஸ்ரீகாந்த், தான் டுவிட்டர் பக்கத்திலேயே இல்லை, என் பெயரை வைத்து யாரோ செய்த வேலை இது’ என்று கூறி மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


