1952 ஆகஸ்ட் 25ல் பிறந்த நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு இன்று 67 வயது!
தேமுதிக., நிறுவன தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்த நாள் 25-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது, எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மதிய உணவு நிதியாக ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை விஜயகாந்த் வழங்கினார்.
மேலும், இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 1500 குடி தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மிஷின்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் பிறந்தநாள் விழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும் இது தொடரும்.
ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடமல் மக்கள் பயனடையும் வகையில் நலத்திட்டங்களை வழங்கி 40 ஆண்டுகளாக வரலாறு படைத்து வருகின்றார் கேப்டன்
சினிமாக் காலம் முதல் தற்போது வரை ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த முறை தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. மெஷின்கள் வழங்கப்படுகிறது. அவை எங்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் எல்லா மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் தே.மு.தி.க. தொண்டர்களால் விரைவில் தூர் வாரப்படும். மரங்களை நடும் இயக்கத்தை நடத்தப் போகிறோம்.
ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் மழை நீரை சேமிக்க வேண்டும். தமிழகத்திற்கான உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும். இனி வரும் காலம் தே.மு.க.வி-ற்கான காலமாக இருக்கும்.
திருப்பூரில் வரும் 15ஆம் தேதி தே.மு.தி.க. முப்பெரும் விழா கேப்டன் தலைமையில் நடைபெற உள்ளது! எதை இலக்காக கொண்டு தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடைந்தே தீருவோம்.. என்று பேசினார்.
விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ஆம் தேதியை தே.மு.தி.கவினர் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். எனவே, இந்த தினத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் பேசுவார் என காத்திருந்தனர். ஆனால் அவர் அமர்ந்த நிலையில் இருந்தும் கூட பேசவில்லை. இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.