கையில் ஒரு கவருடன் அந்த மூத்த தயாரிப்பாளர் விவி அன்டோனி நிதானமாக காத்திருந்தார். அதுவும் ஒரு சந்திப்புக்காக! சுமார் 40 ஆண்டுகள்… தனது பழைய பாக்கியை தீர்ப்பதற்காக…! கொடுத்த வாக்கைக் காப்பதற்காக…. காத்திருந்தார்.
1979இல் புஷ்யராகம் என்ற மலையாள சினிமாவை தயாரித்தார் ஆண்டனி. மது, ஜயன், சாரதா, ஸ்ரீவித்யா முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். பொருளாதார வசதியின்றி அவரால் சாரதாவுக்கு முழு ஊதியமும் கொடுக்க இயலவில்லை.
அதன் பின் மீண்டும் இரண்டு படங்களை தயாரித்தாலும் லாபம் பார்க்க இயலவில்லை. காலம் ஓடியது. 40 ஆண்டுகள் கடந்தன. ஆண்டனி தற்போது வசதியாக உள்ளார். ஆனால் சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் கொடுக்கப்படாமல் மீந்துவிட்டது.
எனவே அவரது மனம் தவித்தது. எப்படியாவது சாரதாவை சந்தித்து, அவருக்கான பாக்கி பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். சாரதா எர்ணாகுளம் டௌன் ஹாலுக்கு வருகிறார் என்ற செய்தி அவர் காதில் தேனாகப் பாய்ந்தது.
ஆதிமக்கள் என்ற சினிமாவின் 50ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சாரதா. கையில் கவரோடு வந்து தன் எதிரில் நின்ற தயாரிப்பாளரைப் பார்த்து வியந்த சாரதா விரைவில் அவரை அடையாளம் கண்டு கொண்டார். அவரிடம் அன்போடு நலம் விசாரித்தார்.
அப்போதுதான் அவருக்கும் தெரியவந்தது… தனக்கு பாக்கி உள்ள சம்பளத்தை கொடுக்கத்தான் அவர் அவ்வளவு நேரம் காத்திருந்து அங்கே வந்துள்ளார் என்பதை அறிந்து வியந்து போனார் சாரதா .
சினிமா உலகில் நடந்திராத, நடக்காத இனியும் நடக்காத ஓர் அரிதான சம்பவமாகவே இது பார்க்கப் பட்டது. .இந்த செய்தி அறிந்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.