சென்னை: வைரமுத்துவைக் குறித்து திரைத் துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்; அவரை, ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும் என பிரச்னைகள் பூதாகாரமாக வெடித்த பின்னர், ஆரம்பத்திலேயே சொல்லாமல் இப்போது சொல்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா.
வைரமுத்து குறித்த சர்ச்சையை பாடகி சின்மயி கிளப்பிய பின்னர், ஒவ்வொருவராக புகார்களைத் தெரிவிக்கத் தொடங்கினர். இந்நிலையில், சின்மயி விவகாரம் குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ஏ.ஆர்.ரஹானா.
காரணம், வைரமுத்து பாடகிகள் பலரையும் ஆசை காட்டி அருகே வர வைத்ததும், பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடுவேன் என்று பிளாக் மெயில் செய்ததும் ஏ.ஆர்.ரகுமானின் பெயரைப் பயன்படுத்திதான்! ஏ.ஆர்.ரகுமானிடம் உன்னை அறிமுகப் படுத்துகிறேன், உனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறி மடக்கியுள்ளார் என்பதால், வெகுகாலமாகவே அவரது இந்த ப்ளாக் மெயில் விவகாரம் சினிமா உலகில் பேசப்பட்டுதான் வந்துள்ளது. அந்த அளவுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான படங்களுக்கு வைரமுத்து பாடல்களை ஒட்டுமொத்தமாக எழுதியிருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறார்கள் சக கவிஞர்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியுமான ரஹானா இதுகுறித்துக் கூறியபோது, பாடகி சின்மயி கூறியதை நான் நம்புகிறேன். ஆனால் 15 ஆண்டுகள் கழித்து அவர் பேசுவது தான் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. கோபம் என்றால் அன்றே வெளிப் படுத்தி இருக்க வேண்டும். வைரமுத்து பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சின்மயி புகார் கூறவில்லை. வைரமுத்து குறித்த பல விஷயங்களை கேள்விப்பட்டுள்ளேன். பெண்கள் பலர் அவரைப் பற்றி என்னிடம் கூறியுள்ளனர். அவர் எப்படிப்பட்டவர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
வைரமுத்துவை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு வளர விட்ட பிறகு கூறக் கூடாது. வைரமுத்துவை மட்டும் ஏன் டார்கெட் செய்ய வேண்டும்?! மற்ற பாடகர்கள் மீது எழுந்த புகார்களையும் விசாரிக்க வேண்டும். வைரமுத்து விவகாரம் குறித்து ரகுமானுக்கு தெரியாது. அவர் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருப்பார்” என்று, தனக்கு முன்னமேயே தெரிந்திருந்தும், பலர் கூறியிருந்தும், அப்போதே வெளிப்படுத்தாமல்,அப்போதே ரகுமானிடம் இது குறித்து எச்சரிக்கை செய்யாமல், அல்லது விஷயத்தைத் தெரியப் படுத்தாமல், இப்போது பிரச்னை பெரிதான நிலையில், அதுவும் டிவி.,யில் பேட்டி என்று அழைத்துக் கேட்டபோது வெளிப்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹானா.