இன்று தல அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது விஸ்வாசம்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே ‘… பாடல் தாலாட்டுப் பாடலாகவும் அதே நேரம் ஜீவனுள்ள உணர்ச்சிப் பாடலாகவும் வெளிப்பட்டுள்ளது. பாடலை எழுதிய கவிஞர் தாமரை இந்தப் பாடல் குறித்து தெரிவித்தவை…
கண்ணான கண்ணே பாடல் சென்ற வாரம் பாடல் வரிக் காணொலியாக வெளியிடப்பட்டு, இன்றுவரை 60 லட்சம் பேரால் (6 மில்லியன்) பார்க்கப்பட்டு பெருவெற்றி அடைந்திருக்கிறது. பாடல் எல்லோருக்கும் பிடித்திருப்பதால் எனக்கு பாராட்டுமழைதான்!.
இயக்குநர் ‘சிறுத்தை சிவா’ அவர்களுக்கு நான் எழுதும் முதல் படம். வழக்கம்போல, கதை முழுவதும் கேட்டுவிட்டே எழுதினேன்.
கதை சொல்ல வீட்டிற்கு வந்திருந்தார். அவரது தோற்றத்திற்கும் குரலுக்கும் பேச்சுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்வளவு மென்மையான குரல் !. மிகவும் தாழ்ந்த குரலில் பேசியதால் என்பாடு திண்டாட்டமானது. “கொஞ்சம் சத்தமாப் பேசுங்க” என்று அவ்வப்போது வேண்டிக் கொண்டேன்.
இயல்பாகவே அப்படித்தானாம். படப்பிடிப்பில் எப்படி சமாளிக்கிறார், மற்றவர்கள் இவரை எப்படி சமாளிக்கிறார்கள், ஒலிபெருக்கி வைத்துக் கொள்வீர்களா என்றெல்லாம் கேட்டு, வியந்து கொண்டிருந்தேன்.
படத்தில் கதாநாயகன் கதாநாயகி வழக்கமான அதகளம் போக ஓர் அழகுக் குட்டிக் குழந்தை இருக்கிறது. கதையும் அதன் மீதாக புனையப் பட்டிருக்கிறது.
கதைகேட்டு இரண்டு மாதங்களாகியும் மெட்டு வந்து சேரவில்லை. இமானுக்கு நிறைவான மெட்டு அமையவில்லையாம்.
ஒரு வழியாக வந்து சேர்ந்த போது, காத்திருந்தது வீண் போகவில்லையென்று தெரிந்தது.
வெள்ளத்தனையது மலர்நீட்டம்,,, மெட்டனையது பாடல் !.
அதன்பிறகு நான் இயக்குநர் சிவாவை சந்திக்கவில்லை. அவர் படப்பிடிப்புக்குச் சென்று விட்டார். எனவே பாடல் முழுக்க தொலைபேசி வாயிலாகவே நடந்தேறியது !
பாடல் பதிவின் போது சித்ஸ்ரீராம் குரலில் பாடலைக் கேட்டபோதே தெரிந்து விட்டது, இந்த ஆண்டு எல்லோரும் கொண்டாடும் பாடலாக இருக்கப் போகிறது என்று !.
முழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்!
இந்தப் பாடலின் பல்லவி.
கண்ணான கண்ணே…!
கண்ணான கண்ணே…!
என் மீது சாய வா..!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா..!
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்…
என் ஏக்கம் தீருமா..?
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்…
என் மின்னல் தோன்றுமா..?
தண்ணீராய் மேகம் தூறும்…
கண்ணீர் சேரும்…
கற்கண்டாய் மாறுமா..?
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ…
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ….
சரணம்
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே..?
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே..!
புதைமணலின் நடுவே
புதைந்திடவே இருந்தேன்…
குறுநகையை எறிந்தே
மீட்டாய் என்னை..!
விண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்..!
கண்பட்டு நூல்விட்டுப் போகும் என ஏதோ பயம் கூடும் !
மயில் ஒன்றைப் பார்க்கிறேன்… மழையாகி ஆடினேன்..!
இந்த உற்சாகம் போதும்
சாகத் தோன்றும்…
இதே வினாடி…
இறுதிப் பல்லவி
கண்ணான கண்ணே..!
கண்ணான கண்ணே..!
என் மீது சாய வா !
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா !
நீ தூங்கும்போது
முன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும் !
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும் !
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்..!
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ….