தனது குடும்ப சொத்து போல ஆணவத்துடன் ஒருவர் பேசுகிறார். கோவில்களுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வேண்டுமென்றால், கோயில் கட்டிய அர்ஷின் வம்சாவளியை கேஸ் போடா சொல்லுங்கள். நான் பார்க்கிறேன் என்கிறார். யார் வீட்டு சொத்து – யார் பேசுவது ?
அறநிலையத்துறை என்பதே ஆங்கில அரசாங்கம் இந்துக்களுக்குள் பிரிவு ஏற்பட செய்த ஏற்பாடு. நீதிக்கட்சி முழுவதும் பணம் மற்றும் செல்வாக்கு உள்ள மனிதர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். கோயில் சொத்தை கொள்ளை அடிக்க விருப்பமில்லாதவர்கள்.
பிராமணர்களுக்கு இணையாக ஏன் கொஞ்சம் மேலாக தங்கள் இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.. ஆங்கில அரசும் வளர்த்துவிட்டது. இதில் இருந்தவர்கள்தான் வரதராஜுலு நாயுடு, நடேசன், பொன்னம்பலம், ராமசாமி முதலியார், லக்ஷ்மணசாமி முதலியார், டாக்டர் நாயர் , ராமசாமி நாயக்கர் , அண்ணாமலை செட்டியார் எனப் பலர்.
பின் அவர்களுக்குள்ளே உரசல் ஏற்பட்டு கட்சி காணாமல் போனது. அவர்கள் பெயரில் கருணாநிதி உபயத்தால் சாலைகள் சென்னையில் உள்ளது. பின்னர் ஈ வெ ரா, திராவிடக் கழகம் தொடங்கி , ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்து பின்னர் திமுக என பிரிந்தது. இது வரலாறு.
கோயில்கள் கூடாது எனக் கூறவில்லை – கொடியவர்கள் கூடாரமாகி விடக் கூடாது என்கிறேன் என்ற வசனங்கள் படத்திற்கு மட்டும்தான். நிஜத்தில் நடந்தது, நடப்பது நாம் அறிவோம். முன்பெல்லாம் உண்டியல் பணத்தை எடுத்தார்கள். கும்பாபிஷேகம் செலவில் சேர்த்தார்கள். பின்னர், முன்னேற்றம் ஏற்பட்டு நகைகள், பாத்திரங்கள் எடுக்கப்பட்டன.
அப்புறம், சிலைகள் – அப்புறம் சிலைகள் எடுத்து, பதிலாக மாற்று உலோக சிலைகள் வைத்தார்கள். அவர்களின் அரசியல் தலைவர்களின் நினைவு நாட்களில் அன்னதானம் , கோயில்கள் உண்டியல் பணம் எடுத்து செய்தார்கள். இதெல்லாம் என்ன நியாயம் ? வேற்று மதங்களின் அறக்கட்டளை அல்லது இவர்களின் அறக்கட்டளையில்ருந்து, ஒரு பைசா தொட முடியுமா.
இந்துக்கள் எப்போதுமே சுயநலவாதிகள். தன் வேலை, தன் குடும்பம், தனது வாழ்க்கை என வாழ்வதுதான் கொடுமை. பாதகம் செய்வாரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா – மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என பாப்பாவாக இருக்கும் போதே தெரியவேண்டும் என்று பாரதி பாடுகிறான்.
எத்தனை கொள்ளைகள் – கடத்தல்கள் – திருச்செந்தூர் வைரவேல் காணாமல் போய், உண்மை தெரிந்த அந்த அலுவலர் இறந்துபோனார். அதேபோல பல கோவில்கள்.- பல நிகழ்வுகள். எழுத்தாளர் நா பார்த்தசாரதி தனது பொய் முகங்கள் என்ற நாவலில் (1972 ல் வெளிவந்தது) எழுதுவார். நாடு, அறிவு,திறமை, உணர்வு உள்ளவர்களிடம் இருந்து, உடல் வலிமை, பணம், பதவி உள்ளவர்களிடம் போகிறது என்பார். எவ்வளவு உண்மை.
அன்று கஜினி முகமது முதல், அலாவுதின் கில்ஜி, மாலிக்கபூர் இவர்களின் படையெடுப்புக்கள் மற்றும் கொள்ளை. தொடர்ந்து ஆங்கில அரசு செய்த கோயில்களின் கையடக்கங்கள் – இவற்றில் என்ன பரிதாபம் என்றால். நாம் இந்த நிகழ்வுகளை எல்லாம் வீர வரலாறுகளாக, சாதனைகளாக படித்தே பாழாகப் போனோம். மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.
எனது வீடு எனது வாசல் என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா , என எழுதுவார் அழகன் திரைப்படத்தில் புலவர் புலமைப்பித்தன். .
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம் இப்போது தெரியாது எதிர்காலம் காட்டும், என்பார் கவியரசு.
இறைவன் இன்னும் இருக்கிறான்…….
– முனைவர் தென்காசி கணேசன் , சென்னை-92