கேள்வி : பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளே மருத்துவ படிப்பில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கருதும்போது இந்தியா மட்டும் அதை கட்டாயப்படுத்துவதேன் ? என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளாரே ?..
எஸ்.குருமூர்த்தி பதில் : பிரிட்டன் என்பது ( கல்வி, மொழி எதிலும் ) பன்முகத் தன்மை இல்லாத – மாநிலங்களாக பகுதிப்படுத்தப்படாத – ஒரே நாடு..அதன் மொத்த மக்கள் தொகை தமிழகத்தை விடக் குறைவு.
நம் நாடோ அருணாச்சல பிரதேசத்திலிருந்து தமிழகம் வரை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொண்ட, ஏராளமான மொழிகள், கல்வி முறைகள் நிறைந்த , பிரிட்டனைப் போல் 20 மடங்கு மக்கள் தொகை கொண்ட நாடு. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பாலுவின் வாதம் அடிப்படையிலேயே தவறு.
நம் நாட்டு மக்களை திசை திருப்பும் பாலு போன்ற அரசியல்வாதிகள் பல உண்மைகளை அறியாமல் பேசுகிறார்கள்.. நம் நாட்டு மருத்துவப் படிப்பையே இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்பதில்லை என்பது அவர்களுக்கு தெரியாது போல இருக்கிறது.
எனவே , நம் நாட்டு மருத்துவர்கள் அங்கு மருத்துவம் செய்யும் உரிமை பெற , அங்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வு எழுதி, தகுதி பெற வேண்டும். பாகிஸ்தான் மருத்துவர்களுக்கு அங்கு தகுதித் தேர்வு கிடையாது. நம் மருத்துவர்களுக்கு உண்டு. இது அவமானம்.
இதற்கு காரணம் நம் மருத்துவக் கல்வி தரம் குறைவு என்று அவர்கள் கருதுவதுதான். இதையெல்லாம் மாற்றத்தான் நீட் போன்ற நுழைவுத் தேர்வு முறை அவசியமாகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட எய்ம்ஸ், வேலூர் சி.எம்.சி, ஜிப்மர், பி.ஜி.ஐ. சண்டிகர் போன்ற சில பெயர் பெற்ற கல்லூரிகளில் படித்த மருத்துவர்களைத் தான் அங்கு மருத்துவம் செய்ய அனுமதிக்கிறார்கள்.
நம் நாட்டில் பெறும் மருத்துவ படிப்பு மற்ற நாடுகளில் மருத்துவம் செய்ய (நீட் போன்ற) நுழைவுத் தேர்வில் அமரத்தான் உதவுமே தவிர , நேரடியாக அங்கு மருத்துவம் செய்யும் உரிமையை பெற்றுக் கொடுக்காது. எனவே, நமது மருத்துவ படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
துக்ளக் 17.07.2019 இதழிலிருந்து…