கொரோனா அறிகுறி இருந்ததால் பேருந்திலிருந்து இழுத்து தள்ளப்பட்ட இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.
தில்லியின் நொய்டாவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகோஹாபாத்துக்கு சாலை மார்க்கமாக 19 வயது இளம்பெண் அன்சிகா யாதவ், தனது தாயாருடன் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்டதாகவும், கொரோனாா அறிகுறிகள் தென் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை பேருந்தில் இருந்து இறங்க வேண்டும் என சகபயணிகள் கூச்சலிட்டு உள்ளனர்.
இதையடுத்து அன்சிகாவை போர்வையில் சுற்றி நடத்துனரும் ஓட்டுனரும் கீழே தள்ளியதாக தெரிகிறது. அப்போது அவரின் தாயார் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத இருவரும் தாய், மகளை வெளியில் பிடித்து தள்ளியுள்ளனர். அனல் காற்று வீசிய அந்தச் சாலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர் இயற்கையாக உயிரிழந்தார் என காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடத்துனரும் ஓட்டுனரும் அன்சிகாவை கீழே தள்ளியதால் அதில் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லி பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அன்சிகாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.