தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
போராட்டங்கள், இயக்கங்கள், எதிர்ப்புகள் நடத்துவது என்றால் உயர்ந்த நலனுக்காகச் செய்வார்கள் என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் உள்ளது. ஆனால் அவற்றை சுயநலத்திற்காக பயன்படுத்துபவர்கள் இருப்பார்கள் என்றோ அதன் நிர்வாகத்தில் தேசத்திற்கு துரோகம் செய்வதற்கும் பின்வாங்க மாட்டரகள் என்றோ நிறைய பேருக்குத் தெரியாது.
எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்ற அதிகார தாகம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட போராட்டங்களுக்குத் திட்டம் தீட்டுவார்கள். இதில் வியப்பு எற்படுத்துவது என்னவென்றால், போராட்டம் நடத்துவதையே தொழிலாகக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளார்கள் என்பது. பாதிக்கப்பட்ட ஏழைகளாகவும் தொழிலாளர்களாகவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இவர்கள் செல்வம் நிறைந்தவர்கள், போராட்டத்தையே தொழிலாகக் கொண்ட நிபுணர்கள். இவர்களுக்கு அயல்நாட்டு நிதியுதவி, பதவி இரை, அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு போன்றவை மிக அதிக அளவில் இருக்கிறது. குழப்பம் ஏற்படுத்துவதற்குத் தேவையான நவீன ஆயுதங்கள், போராட்ட முகாம்களில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்குப் பல மாதங்களுக்குப் போதுமான உணவுப்பொருட்கள், கேளிக்கைத் தேவைகளுக்கு அளவுக்கதிகமான ஏற்பாடுகள் போன்றவை செய்யப்படுகின்றன.
அதாவது இது ஒரு தொழில். இதற்கு மேனேஜ்மென்ட், திட்டக்குழு, நிபுணர்கள் முதலான வேலை வாய்ப்புகளும் அமைப்புகளும் உள்ளன. இவற்றைத் தூண்டுவதும் மேய்ப்பதும் அரசியல் கட்சிகள்.
எடுத்துக்காட்டாக, சில ஆண்டுகள் முன்னர் புதிதாகப் பிரிந்த மாநிலங்களுக்கு தனிப்பட்ட அந்தஸ்து வேண்டும் என்று மாநிலக் கட்சிகள் போராடின. அந்தக் கூச்சலில் அப்போதிருந்த அரசாங்கங்களை இறக்கிவிட்டு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். வந்த பின் அந்த தனிப்பட்ட அந்தஸ்தைப் பற்றி வாயே திறக்கவில்லை. அதோடு போராட்டத்தால் உற்சாகமடைந்து ஓட்டு போட்ட மக்கள் ‘பிரத்தியேக ஹோதா’ என்னவாயிற்று என்று கேள்வி கேட்கக் கூட இல்லை அதாவது மக்கள் உடனடியாக மறந்து விடுகிறார்கள். போராடக்காரர்கள் மாயமாக மறைந்து விடுகிறார்கள். உண்மையில் அத்தகைய தனிப்பட்ட அந்தஸ்து என்பது அரசாங்கச் சட்டத்தின்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்று மாநிலத்தின் இரு கட்சிகளுக்கும் தெரியும். அது தெரியாத பொதுமக்களின் அறியாமையை ஊதி விட்டு மீண்டும் அணைத்து விடும் தனித் திறமை கட்சித் தலைவர்களிடம் உள்ளது.
அரசாங்க சொத்துக்களைப் பிடுங்கி அரசாங்க நிலங்களை அநியாயமாக ஆக்கிரமித்தவர்கள் உள்ளனர். அதிலும் நம் தேசமக்கள் அல்லாத அக்கிரம ஊடுறுவிகள் மிகப் பலர். உண்மையில் அரசாங்க நிலங்களில் அவர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கொடுப்பதும் அரசியல் கட்சிகளே. அவர்கள் அனைவரையும் தம் ஒட்டு வங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக போலி அடையாள அட்டைகளை ஏற்பாடு செய்கிறார்கள். அவர்கள் தம் உதவியை நம்பி இருப்பதால் தம் விருப்பத்திற்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கொடிய ஆயுதங்களைக் கொடுத்து பொதுச்சொத்துக்கு தீங்கிழைக்கும் குற்றவாளிகளாக மாற்றி அக்கிரமங்களுக்கும் தீய நடவடிக்கைகளுக்கும் மையமாக அந்த இடங்களை உருவாக்குகிறார்கள்.
எப்போதாவது ஏதாவது அரசாங்கம் அந்த அரசாங்க நிலங்களைத் திரும்ப பெறுவதற்கு முயற்சித்தாலும் அக்கிரம ஊடுருவவாதிகளை அடையாளம் கண்டு அங்கிருந்து விரட்டி விட எண்ணினாலும் அக்கிரமமாக கட்டிய கட்டடங்களை அகற்றி, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சித்தாலும் உடனே குற்றவாளிகளான அவர்கள் கும்பலாக எதிர்ப்புக் குரல் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். அரசியல்வாதிகளால் இது மதத்தின் மீதான தாக்குதலாக, ஏழைகளின் மீதான வன்முறையாக சித்திரிக்கப்படுகிறது.
உண்மை தெரிந்தாலும் ஊடகங்கள் உண்மையைக் கூறமாட்டா. அந்த அக்கிரமக்கார்ர்களுக்கு துணை நின்று அரசுக்கு எதிராக செய்தியும் விளக்கமும் எழுதுவார்கள். காட்சிகளை சித்திரித்துக் காட்டுவார்கள்.
இதில் விந்தை என்னவென்றால் இந்த தேசத்தில் பாமரர்களும் சரி படித்தவர்களும் சரி விவேகத்தோடு ஆராய்வதில்லை. பரபரப்புச் செய்தியின் வேகத்தில் உண்மைகளை கவனிக்காமல் ஆவேசப்படுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆவேசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரியணை ஏறவேண்டும் என்று ஆசைப்படும் அரசியல்வாதிகளின் முயற்சி பலனளித்து விடும்.
இத்தகைய வன்முறைகளால் நஷ்டப்படுவது தேசம் தான் என்ற விஷயம் எந்தத் தலைவருக்கும் எந்தக் குடிமகனுக்கும் புரிவதில்லை. சட்டப்படி போராட்டத்தை அடக்க முயற்சித்தால் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியது என்று கோஷங்கள் எழும். அவற்றை பிரசுரம் செய்வதற்கு பத்திரிக்கைகள் தயாராக இருக்கும்.
சில எதிர்ப்புகள் செயற்கையானவை என்று தெரிந்தாலும் அவர்களுடைய கோரிக்கைகள் அர்த்தமற்றவை என்று தெளிவாகத் தெரிந்தாலும் அரசாட்சிக்கு எதிராக வீணாகப் பல தடைகளை மாதக்கணக்கில் உண்டாக்கினாலும் நாட்டு முன்னேற்றத்தை அழித்தாலும் யாரும் எதுவும் செய்ய இயலாத நிலைமை.
இதில் கொடுமை என்னவென்றால், இந்தப் போராட்டங்களில் ஈடுபடுபவர் எல்லோருமே, எந்த பெயரைச் சொல்லி போராட்டம் நடத்தப்படுகிறதோ, அதோடு தொடர்பில்லாத குற்றவாளிகளும் தேச விரோதிகளும் மத வெறியர்களுமே.
இந்த நிலையை ஏற்படுத்தும் கட்சிகள், வெளிநாட்டுக் குற்றவாளிகளோடு கை கோர்த்து, அவர்கள் அளிக்கும் பணத்தை அக்கிர வழிகளில் பெற்று இத்தகைய போராட்டங்களுக்காக செலவிடுகிறார்கள்.
முன்னேற்றப் பாதையில் செல்லும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் வெளிநாட்டு அமைப்புகளோடும் பகை நாடுகளோடும் கை கோர்ப்பதற்குக் கூட பின்வாங்காத அதிகார வெறி பிரித்து ஆடும் அரசியல்வாதிகளை அடக்குவதற்கு வழியில்லாதபடி திடமான சதியைத் தீட்டுகிறார்கள்.
சமூக ஊடகங்களின் புண்ணியமா என்று சில உண்மைகள் தெரிய வருகின்றன. சில ஆய்வாளர்களும், நாட்டு முன்னேற்றத்தை விரும்பும் தேசிய வாதிகளும் உண்மைகளை வெளியிடுகிறார்கள்.
இந்தப் பின்னணியில் மக்களிடம் புரிதல் வளர வேண்டும். தேர்தல் நல்ல விதத்தில் குற்றம் குறைகள் இன்றி, கள்ள ஓட்டு விழாமல், வாக்காளர்களின் பெயர்கள் காணாமல் போகாமல், வன்முறையின்றி, ஒவ்வொருவரும் வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொண்டால் ஜனநாயகம் நல்ல பதிலை அளிக்கும்.
மக்களிடம் அத்தகு சைதன்ய விழிப்பை, உள்ளத் தூய்மை கொண்ட தேச பக்தர்கள் ஏற்படுத்த வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ் மார்ச், 2024)