அரியலூரில் பள்ளி மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.
பாடப்புத்தகத்தைத் தூக்க வேண்டிய மாணவிகள், இன்று மது பாட்டிலை தூக்குகிறார்கள் என்றால், இதற்கு அரசுதான் காரணம்’ என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று அங்கு மூவர் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு மதுபானத்தை குடிக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது.எவ்வளவு தான் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பள்ளி மாணவர்கள் வரையில் மதுவுக்கு அடிமையாகும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இதற்குப் பள்ளி மாணவ-மாணவிகள் மது குடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவருவதை ஆதாரமாகக் கூறலாம். பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது. `இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.