ஆன்லைனில் வகுப்பு எடுப்பதை தடுக்க முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பதைத் தடுக்க முடியாது என்று கூறினார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன். மேலும், “பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்துவது கூடாது” என்று தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு தடை என்று அறிவித்த சிறிது நேரத்தில் அமைச்சர் அடுத்த அறிவிப்பினை இவ்வாறு வெளியிட்டார்.
இன்று காலை அமைச்சர் செங்கோட்டையன் ஆன்லைன் வகுப்புகள் குறித்து தெரிவித்த போது, தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது என்று கூறினார்.
ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்!
பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப் படும் என்றும் தெரிவித்தார்.
அந்தக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆனால், ஆன்லைன் வகுப்பு குறித்து கருத்து தெரிவித்த சில மணித் துளிகளில், தமது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஆன்லைன் வழி பாடம் நடத்துவதை தடுக்க முடியாது என்று கூறினார்.