சீனாவின் வுகாண் நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் 210 அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி கல்லூரி திறக்கப்படததால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ஈரோட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது இபோதைக்கு சாத்தியமில்லை என்றும் கொரோனா பாதிப்புகள் குறையும் வரை பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என தெரிவித்தார்.
மேலும், பள்ளி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.