தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் அனைத்தும் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன.
அரசுப் பள்ளிகளில் பாடங்களை தொலைக்காட்சி வாயிலாக நடத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரசு பள்ளியில் புதிதாக சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொகையை தமது சொந்தப் பணத்திலிருந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியரின் இந்த திடீர் அறிவிப்பால் அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அரசு பள்ளியில் தனியார் பள்ளிகளை விட அதிக அக்கறையுடன் பாடங்கள் நடத்தப்படுகின்றன எனவும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது எனவும் இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.