சேலத்தில் நேற்று நடந்த, 10ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு, பிளஸ் 2 வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகம் முழுவதும், 10ம் வகுப்புக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த முறை திருப்புதல் தேர்வு போன்று, வினாத்தாள் லீக் ஆகாமல் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு நாளன்று காலையில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து, அருகில் உள்ள பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று, 10ம் வகுப்புக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதற்காக, சேலம் கொண்டலாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து, அருகில் உள்ள, 15 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டது.
அதில், 10ம் வகுப்பு ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கான வினாத்தாள்களுக்கு பதில், நடந்து முடிந்த பிளஸ் 2 வேதியியல் பாட வினாத்தாள்கள் இருந்தன. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, வினாத்தாள்கள் வழங்குவதை நிறுத்தினர்.
கல்வித்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆங்கிலவழி வினாத்தாள்கள் மீண்டும், 10:35 முதல், 11:00 மணிக்குள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டது.
வினாத்தாள்களை சரிபார்க்காமல், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்த மாவட்ட கல்வி நிர்வாகத்தின் மீது, ஆசிரியர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.